வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, September 15, 2011

நவாலி தேவாலயம் மீது ஸ்ரீலங்கா அரசின் மிலேச்சத்தனமான விமான தாக்குதல்

தமிழர் தாயக வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத இரத்தக்கறை படிந்த கோரமான கொடூரநாள் 09.07.1995 ஆகும். அந்த நவாலி படுகொலையின் 11 ஆம் ஆண்டு நினைவு நாளை 2006 இல் நாம் ஒரு கணம் மீண்டும் மீட்டுப்பார்க்கின்றோம். இந்தக் கொடுமையான பலியெடுப்பு சர்வதேச சமூகத்தையே மிகவும் மனவருத்தத்திற்கு உள்ளாக்கியதுடன் மக்களை சொல்லெணாத்துயரத்திற்கு இட்டுச் சென்றது. கடந்த 09.07.1995 தமிழர் வரலாற்றில் இரத்த ஆறு ஓடிய ஒரு கோரமான கொடிய நாள் . அன்றுதான் நவாலி சென்.பீற்றர்ஸ் மற்றும் முருக மூர்த்தி ஆலயம் ( சின்னக்கதிர்காமம்) அழிந்து அப்பாவியாக இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை காவுகொண்ட நாள் . முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்காவின் பணிப்புரையின் பேரில் வலிகாமம் பகுதியில் ஷெல் ரொக்கட் தாக்குதலில் அதிர்ந்து கொண்டிருந்த வேளையில் , விமானப்படையினால் ஆடப்பட்ட ஓர் இனப்படுகொலையாகும். வரலாற்றில் இந்த இரத்தக்கறை படிந்த நாட்களை , நிகழ்வுகளை மறக்க முடியாது. தமிழினம் மறக்காது என்று அன்றைய நிகழ்வையொட்டி லண்டன் பி .பி.சி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. முன்னேறிப்பாய்தல் எனப்பெயர்கொண்ட ` லீட்போர்வேட்' இராணுவ நடவடிக்கையை வலிகாமம் பகுதியில் தொடங்கிய இராணுவத்தினர் பலாலியிலிருந்தும் அளவெட்டியிலிருந்தும் மிகக்கொடூரமான முறையில் ஷெல் தாக்குதல்களையும் குண்டுத்தாக்குதல்களையும் மேற்கொண்டிருந்தனர் . திடீரென 09.07.1995 அன்று வலிகாமம் தென்மேற்கு , வலிகாமம் மேற்கு வலி. தெற்கு, வலி.வடக்குப்பகுதியிலுள்ள மக்கள் குடியிருப்புக்கள், ஆலயங்கள் அரச மற்றும் பொது நிறுவனங்களை நோக்கி காலை 05.20 மணியிலிருந்து விமானத்தாக்குதல்களும் ஷெல் தாக்குதல்களும் தாறு மாறாக பாரிய சத்தங்களுடன் நடத்தப்பட்டன . அன்றைய தினம் காலை வலிகாமம் பகுதியிலுள்ள மக்கள் உடுத்த உடுபுடவைகளுடன் கையில் அகப்பட்ட பொருட்களுடன் கண்ணீரும் கம்பலையுமாக வெளியேறிய காட்சிகள் இன்றும் மறக்க மடியாத ஒரு நிகழ்வாக தமிழர் மனதில் வடுவாக பதிந்துள்ளது . கால்நடையாகவும் சைக்கிள்களிலும் தள்ளுவண்டிகளிலும் மாட்டு வண்டில்கள் , முச்சக்கர வண்டி மூலமாகவும் வழுக்கையாறு வெளி நவாலி ஆனைக்கோட்டை பிரதான வீதி கட்டுடை மானிப்பாய் பிரதான வீதி வழியாக கைக்குழந்தைகள், வயோதிபர், முற்றாக எழுந்து நடக்க முடியாதவர்கள் என பலரும் பல இன்னல்களை சுமந்த வண்ணம் சென்றனர் . அவ்வேளையில், சகல வீதிகளிலும் ஹெலிகொப்டர் தாக்குதல் அகோரமான ஷெல் தாக்குதல்களினால் வீதிக்கு வீதி காயப்பட்டவர்கள் , இறந்தவர்கள், காயமடைந்து இரத்தம் சிந்திக்கொண்டிருந்தவர்கள ை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல வாகனங்களும் இல்லை . வாகனங்களை இயக்குவதற்கான எரிபொருட்களும் அற்ற பொருளாதார தடையான மந்தமான காலப்பகுதியாகும் . இதேநேரம், காயமடைந்தவர்கள் ஏதோ ஒரு வழியின் ஊடாக எடுத்துச் செல்லப்பட்டால் , அவர்களைக் காப்பாற்ற மருந்தகங்களோ , வைத்தியசாலைகளோ இயங்கமுடியாத அவலநிலை. இறுதியில் காயமடைந்தவர் சிகிச்சையின்றி இறந்த நிகழ்வுகளையும் மறக்க முடியாது . அன்றைய தினம் குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக நவாலி சென் .பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் தாகம் தீர்ப்பதற்காக அமர்ந்து களைப்பாறினர் . அவ்வேளையில், யாழ். நகரப் பகுதியில் இருந்து அராலி நோக்கி வந்து கொண்டிருந்த விமானம் தொடர்ச்சியாக விமானம் மூலம் 13 குண்டுகள் தான்தோன்றித்தனமாக மேற்படி இரு ஆலயங்கள் மீதும் வீசப்பட்டன . அவ்வளவுதான்! நவாலிக்கிராமம் ஒரு கணம் அதிர்ந்து வீதிகள் தடைப்பட்டு , மரங்கள் முறிந்து வீழ்ந்து, வீடுகள் தரைமட்டமாகி, மதில்கள் வீழ்ந்து பாரிய புகை மூட்டம் காணப்பட்டது. நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயமும் நவாலி சின்னக்கதிர்காம முருகன் ஆலயமும் மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் அதிர்ந்தன. சுமார் 147 பேர் அந்த இடத்திலேயே குடாநாட்டின் பல்வேறு இடத்தைச் சேர்ந்தவர்கள் பலியானார்கள் . இந்த நிகழ்வில் இக்கொடூரச்சாவானது கையிழந்து , காலிழந்து, தலையிழந்து, உடல்சிதறி குற்றுயிராகக் கிடந்த நிகழ்வுகளை எம்மால் மறந்துவிட முடியாது . சுமார் 360 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை அளிக்காத நிலையில் நீண்ட நேரம் இரத்தம் சிந்தி பலர் உயிர் இழந்ததை காணக்கூடியதாக இருந்தது. அன்றைய தாக்குதலில் பொது மக்கள் சேவையில் நேரடியாகப் பங்கு கொண்ட வலி .தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த கிராம அலுவலர்களான நவாலி வடக்குப் பிரிவு கிராம அலுவலர் செல்வி.ஹேமலதா செல்வராஜா அவர்களும், சில்லாலைப் பிரிவு கிராம அலுவலரான பிலிப்புப்பிள்ளை கபிரியேல்பிள்ளை அவர்களும் ஸ்தலத்தில் பலியான அரச சேவையாளர்கள் , எவராலும் இவர்களை முறக்கமுடியாது. அன்றையதினம் மக்கள் தொண்டுப்பணியில் ஈடுபட்டு உணவு , குடிநீர் வழங்கிக் கொண்டிருந்த 48 தொண்டர்களும் அந்த இடத்தில் துடி துடித்து உயிர் இழந்ததை மறக்கமுடியாது. 9 ஆம் திகதியான ஜூலை நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் வருடா வருடம் நினைவுகூரும் வழிபாடுகள் நடாத்தப்பட்டு வருகின்றன. மேற்படி 1995 ஆம் ஆண்டு நவாலி இனப்படுகொலை தொடர்பாக நவாலி வடக்கு சோமசுந்தர புலவர் வீதியிலும் , நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயப்பகுதியிலும் படுகொலைச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன .

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை