

அதே நேரத்தில் இலங்கையின் தெற்குப் பகுதியில் ‘ஜெவிபி’ சிங்களர் அமைப்பு, வடகிழக்கில், இந்திய ராணுவம் நிலை பெற்றிருப்பதை எதிர்த்து, கலவரங்களில் இறங்கியது சிங்கள காவல் நிலையங்களும், அரசு அலுவலகங்களும் தாக்கப்பட்டன. இதில் 2500 பேர் வரை கொல்லப்பட்டனர். இத்தகைய பதட்டமான சூழலில் பதவிப் பொறுப்புக்கு வந்த பிரேமதாசா, நிலைமையைப் புரிந்து கொண்டு, இந்திய ராணுவத்தை வெளியேற்றிட வேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு வந்தார்.

பிரேமதாசா தானாக அறிவித்த இந்த போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்க தயக்கம் காட்டினார். இந்திய ராணுவம் வெளியேறாதவரை, போர் நிறுத்தம் செய்ய முடியாது; அது தங்களுக்கு ஆபத்து என்று விடுதலைப் புலிகள் அறிவித்தனர். இதைப் புரிந்து கொண்ட பிரேமதாசா, கொழும்பு புறநகரில் கோயில் விழா ஒன்றில் பேசுகையில் – இந்திய அரசு, மூன்று மாதங்களில் ராணுவத்தைத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தார். அதே நாளில், இலங்கை வெளிநாட்டுத் துறை அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே விடுதலைப் புலிகளுக்கு, பேச்சுவார்த்தைக்கு வருமாறு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்தார். புலிகள் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தனர்.
பிரேமதாசாவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்களின் குழு – பாலசிங்கம் தலைமையில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளோடு பேச்சு வார்த்தையைத் துவக்கியது. மனித உரிமைக்கு எதிரான இந்திய ராணுவத்தின் அடக்குமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. 5000 தமிழர்கள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டதையும், அமைதிப்படை ஆக்கிரமிப்புப் படையாக செயல்படுவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்பதையும் விடுதலைப் புலிகள் விளக்கினர். இந்தக் கருத்துகள் கூட்டறிக்கையாக வெளியிடப்பட்டபோது, பிரேமதாசா மீது இந்தியா கோபம் கொண்டது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதர் பேச்சு வார்த்தையில் இந்திய ராணுவ நடவடிக்கைகளை விமர்சனம் செய்வதற்குக் கண்டனம் தெரிவித்தார்.
இதற்கிடையே தெற்கு ஆசிய நாடுகளின் மாநாட்டை (சார்க்) நவம்பரில், இலங்கையில் நடத்தவிப்பதால், ஜூலை 31 ஆம் தேதிக்குள், இந்திய ராணுவத்தை திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு பிரேமதாசா, பிரதமர் ராஜீவுக்குக் கடிதம் எழுதினார். ஆத்திரமடைந்த ராஜீவ் காந்தி, பெங்களூரில் பேசும்போது, “ஈ.பி.ஆர்.எல்.எப். ஆட்சி நடத்தும் மாகாணக் கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்களைப் பெற்றுத் தந்த பிறகுதான், அமைதிப்படை வெளியேறும்” என்று அறிவித்தார். பிரேமதாசா, ராஜீவ்காந்தியின் இந்தப் பேச்சால் மிகவும் வருத்தமடைந்தார். இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளில் இலங்கை – இந்திய முரண்பாடுகள் பற்றியே பெரிதும் விவாதிக்கப்பட்டன. இந்த நிலையில், வரதராஜப் பெருமாள் முதலமைச்சராக இருந்த தமிழர் பகுதியில் பள்ளி மாணவர்களைக் கட்டாயப்படுத்தி, ‘தமிழ் தேசிய ராணுவம்’ ஒன்றை உருவாக்கினர். சுமார் 4500 சிறுவர்களை ‘ஈ.பி.ஆர். எல்.எப்.’ குழுவினர், பள்ளிகளிலிருந்து கட்டாயப்படுத்தி கடத்திப் போய் பல்வேறு இந்திய ராணுவ முகாமுக்குப் பயிற்சிக்கு அனுப்பினர். விடுதலைப் புலிகள் சிறுவர்களை ராணுவத்தில் சேர்ப்பதாக குற்றம் சாட்டியது இந்தியா. ஆனால் அந்தக் குற்றத்தைச் செய்ததே இந்தியா தான்!

பிரேமதாசா கடிதத்தால் ராஜீவ் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விட்டார். ஆசிய நாடுகளின் முடிசூடா மன்னராக வலம் வருவதற்கு ராஜீவ் காந்தி விரும்பினார். அதன் காரணமாகத்தான் ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களின் பிரதிநிதியாக தன்னைத் தானே நியமித்துக் கொண்டு ஈழத் தமிழர் விடுதலை இயக்கத்தை ஓரம் கட்டிவிட்டு, ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதைத் தமிழர்கள் மீது திணித்தார். வலிமை மிக்க இந்திய ராணுவத்தின் முன் இந்த சின்னஞ்சிறு நாடுகள் எல்லாம் ‘தூசு’ என்ற சர்வாதிகார மனப்போக்கில் திளைத்திருந்த ஒருவருக்கு பிரேமதாசாவின் இந்த அறிவிப்பு ஆத்திரத்தை ஏற்படுத்தாதா? பிரேமதாசாவுக்கு ராஜீவ் எழுதிய பதிலில் இந்த ஆத்திரத்தின் வெளிப்பாட்டைப் பார்க்க முடியும். இலங்கை அரசுடன் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் செய்ய முன் வந்திருந்தாலும் அந்த போர் நிறுத்தத்தை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ராஜீவ், பிரேமதாசாவுக்கு பதில் எழுதினார்.
அமெரிக்காக்காரன் நடத்தி வரும் நாட்டாண்மையை எல்லாம் மிஞ்சக் கூடியதாக, இது இருப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். ராஜீவ் தனது பதில் கடிதத்தில் புலிகள் போர் நிறுத்தம் செய்தால் மட்டும் போதாது. இலங்கையின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும். இலங்கை அரசிடம் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றெல்லாம் ராஜீவ் காந்தி நிபந்தனை விதித்தார். இதற்கு அர்த்தம் பிரேமதாசாவைவிட ராஜீவுக்கு இலங்கை ஒருமைப்பாட்டில் கவலை வந்து விட்டது என்பது அல்ல. விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும் தமது முயற்சி தோல்வியில் முடிந்ததும், பிரேமதாசா, தனது ராணுவத்தைத் திருப்பி அனுப்ப கெடு விதித்து விட்டாரே என்ற ஆத்திரமும் தான் காரணம். பிரேமதாசா, ராஜீவ் மிரட்டலுக்கு அஞ்சவில்லை.
இன்னும் ஒரு படி மேலே போய் அவர் பதிலடி தந்தார். “ஒப்பந்தப்படி இந்திய ராணுவம் எனது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. நானே இந்திய ராணுவத்தை வெளியேற உத்தரவிடுவேன்” என்று அறிவித்தார். தெற்கு ஆசியாவின் சக்தி மிக்க தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள துடித்துக் கொண்டிருந்த ராஜீவ் காந்திக்கு பிரேமதாசா விடுத்த சவாலை, ராஜீவால் செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் ராஜீவ் மிரட்டலுக்கு பணிய மறுத்த விடுதலைப் புலிகளை ஒழிப்பதில் தீவிரம் காட்டி செயல்பட்டு வந்த உளவுத் துறையின் கவனம், பிரேமதாசாவின் பக்கம் திரும்பியது. பிரேமதாசாவுக்கு எதிரான திட்டங்களை உளவுத் துறை உருவாக்கத் தொடங்கியது. விடுதலைப் புலிகளுக்கு பச்சைக் கொடி காட்டினார்கள். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆயுதங்கள் தரத் தயாராக இருப்பதாகவும், பிரேமதாசாவை எதிர்த்து போராட்டத்தைத் தொடங்கினால், இந்தியா விடுதலைப் புலிகள் பக்கம் நிற்கும் என்று விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு தூது அனுப்பினார்கள். ஆனால், இந்திய சதி வலையில் சிக்கிட பிரபாகரன் தயாராக இல்லை. பிரபாகரன் இத்திட்டத்தை நிராகரித்து விட்டார்.
இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று நீங்கள் கேட்கலாம். ஆதாரங்களுடன் தான் ஒவ்வொரு கருத்தையும் நான் உங்கள் முன்னால் கூறிக் கொண்டிருக்கிறேன். நான் கூறிய இந்தக் கருத்துகளுக்கு சாட்சியாக நான் நிறுத்த விரும்புவது மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனைத் தான்.
முரசொலி மாறன் அப்போது தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர். பிரேமதாசா – ராஜீவ் முரண்பாடு முற்றியிருந்த நேரத்தில் ராஜீவ் முரசொலி மாறனை அழைத்துப் பேசினார். இது பற்றி முரசொலி மாறனே இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் விரிவாகக் கூறுகிறார். இதோ முரசொலி மாறன் பேட்டி:
“இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டபோதே அதை எதிர்த்தவர் பிரேமதாசா. இவர் இலங்கை அதிபர் ஆனதும் இந்திய அமைதிப் படையை வெளியேற்றச் சொன்னார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு, இந்தியப் படைக்கு எதிராக புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார். பிரேமதாசா – பிரபாகரன் நெருக்கம் அதிகமாவதைக் கண்ட இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி என்னை (முரசொலி மாறன்) அழைத்துப் பேசினார். பிரபாகரனுக்கு நாம் உதவிகள் செய்யலாம். புலிகள் பற்றி உண்மை நிலவரம் எனக்கு தெரியாமல் போய் விட்டது. எனவே தமிழக முதல்வர் கருணாநிதியை புலிகளுடன் பேசச் சொல்லுங்கள். சுதந்திர தமிழ் மாநிலம் அமைக்க நாம் உதவலாம் என்று கூறினார். நான் (முரசொலி மாறன்) இப்போதே அவர்கள் சுதந்திர தனி மாநிலமாகத்தான் உள்ளனர். வரி வசூல் வரை நீதிமன்றம் வரை நிர்வாகம் செய்கிறார்கள் என்றேன். உடனே ராஜீவ் காந்தி சிரித்தபடி தமிழ் ஈழத்தின் பிதாமகர் தி.மு.க. தான் என்றார்.” (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ 16.12.1997)

ஒரு முக்கியமான செய்தியை சுட்டிகாட்ட வேண்டும். பிரேமதாசா கொழும்பு புறநகர்ப் பகுதியான பட்டாரமுல்லா என்ற இடத்தில் 1989 ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதி பேசும் போது இந்திய ராணுவம் இலங்கையிலிருந்து ஒரு மாத காலத்துக்குள் அதாவது ஜூலை 29 ஆம் தேதிக்குள் வெளியேறிட வேண்டும் என்று கெடு நிர்ணயித்து அறிவித்தார். (ஜூலை 29 – என்ற தேதிக்கான முக்கியத்துவம் ராஜீவ் – ஜெயவர்த்தனா ஒப்பந்தம் அமுலுக்கு வந்த தேதி என்பதாகும்). ராஜீவ் காந்தியும் இந்திய உளவு நிறுவனமும் பிரேமதாசாவின் இந்த ‘கெடு’வால் அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்கள் இதை சற்றும் எதிர்பார்க்க வில்லை.
அவசர அவசரமாக இந்திய உளவு நிறுவனம் பிரேமதாசாவுக்கு எதிரான சதித் திட்டங்களை உருவாக்கியது. என்ன திட்டம்?
1. இந்திய ராணுவம் வெளியேறக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தும், ராஜீவ் – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை பிரேமதாசா கை விடுவதை எதிர்த்தும், தமிழர் பகுதியில் தங்களின் ‘கைத்தடி’ அமைப்பிலிருந்து ஆட்களைப் பிடித்து பிரேமதாசாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்த இந்திய உளவு நிறுவனம் ஏற்பாடு செய்தது.
2. விடுதலைப் புலிகள் தாக்கும் நிலையில் பலமாகவே உள்ளார்கள் என்றும், இந்திய ராணுவம் இப்படிப்பட்ட நிலையில் வெளியேறக் கூடாது என்றும், விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பிரேமதாசாவின் இலங்கை ராணுவத்துக்குக் கிடையாது என்றும் சில சம்பவங்களை உருவாக்கி உணர்த்த வேண்டும் என்று திட்டங்களை வகுத்தனர். தமிழ் ஈழத்தில் ‘இந்தியாவின் தலையீடு’ என்ற விரிவான நூலை (Indian Intervention in Srilanka) ரோகனா குணரத்னா என்ற கொழும்பு பத்திரிகையாளர் எழுதியுள்ள இந்த நூலில் இந்திய உளவு நிறுவனத்தின் மேற்குறிப்பிட்ட திட்டங்களை அவர் எடுத்துக் காட்டியிருக்கிறார்.
விடுதலைப் புலிகள் வலிமை குறையாதவர்கள் என்றும், அவர்கள் தலைவர்களைக் கொலை செய்யக் கூடியவர்கள் என்றும் பிரேமதாசா இந்திய ராணுவத்தை வெளியேறச் சொல்லும் கருத்துக்கு கடும் எதிர்ப்பை உருவாக்கிவிடலாம் என்ற திட்டத்தின் கீழ் சில கொலைகளுக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டன. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள்ளேயே இந்திய உளவு நிறுவனத்தின் வலையில் சிக்கியிருந்த மாத்தையாவின் அணி, இதற்காக, களமிறக்கப்பட்டது.

1989 ஜூலை 12 – தமிழர் அய்க்கிய விடுதலை முன்னணி தலைவர்கள் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன்.
1989 ஜூலை 17 – அதாவது, அடுத்த நான்கு நாட்களில் புளோட் இயக்கத் தலைவர் உமா மகேசுவரன்.
1989 ஜூலை 23 – அடுத்த 10 நாட்களில் ‘பிரபாகரன்’ மாத்தையால் கொல்லப்பட்டார் என்ற அறிவிப்பு (அனைத்து இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களில் உயிருடன் இருந்த பிரபாகரன் – மாத்தையாவால் கொல்லப்பட்டதாக இந்திய உளவு நிறுவனம் செய்திகளைப் பரப்பியது).
பிரேமதாசா – இந்திய ராணுவம் வெளியேற கெடு விதித்த ஒரு மாத கால இடைவெளியில் மட்டும், இந்தக் கொலைகள் நடந்தன என்றால், அதன் நோக்கம், மூளை, பின்னாலிருந்து இயக்கிய சக்திகளைப் புரிந்து கொள்ள முடியும்.
(தொடரும்)
விடுதலை இராசேந்திரன்
No comments:
Post a Comment