வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Friday, December 16, 2011

வரலாற்றின் கண்ணாடி பிரபாகரன்

 சென்னை திருவல்லிக்கேணியில் பாட்டுத் திறந்தால் வையத்தை பாலித்திடப் பிறந்த பாரதி நடந்த தெரு வாழ்ந்த தெரு, துளசிங்கப் பெருமாள் கோயில்தெரு, அந்த வீதியில் பாரதியார் இல்லம் இருக்கிறது. பாரதியார் ஒரு ஒண்டிக் குடித்தனக்காரர். அக்ரஹார வீடுகளின் அமைப்புள்ள வீட்டில், ஒரு இடுக்கில் ஒரே ஒரு அறையும் சமையல் கட்டுமுள்ள பகுதியில் பாரதி வசித்து வந்தார


அவர் வாழ்ந்த இல்லம் அரசுடமையாக்கப்பட்டு, ஏகப்பட்ட பணம் செலவழித்து புதுப்பிக்கப்பட்டது. இன்று அரண்மனை போல் காட்சி தருகின்றது. இவ்வளவு பெரிய அரண்மனையிலா பாரதியார் வாழ்ந்தார் என பார்வையாளர்கள் ஆச்சரியப்படுகின்றார்கள்.
ஏழை எளியவர்கள் வீட்டில் – இந்த ஈன வயிறு பாடும் பாட்டில்… என்றொரு கவிதை. இன்னொரு கவிதை…
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்
சோற்றுக்கோ வந்ததிந்தப்பஞ்சம்.
அவர் எழுதிய தன் வரலாற்றில்
“பொருளில்லாற்கில்லை இவ்வுலகென்ற புலவர் தம் மொழி
பொய்ம்மொழியன்று காண்.
பொருளில்லாற்கு இனமில்லை, துணையில்லை,
பொழுதெல்லாம் இடர்வந்து ஏற்றுமால்”

என்று பதில் தந்த இத்தனை கவிதை வரிகளும் மாளிகை போலிருந்த வீட்டுக்குள் இருந்து எடுத்தெறியப்பட்டுவிட்டன. அரண்மனையாக்கி, பாரதியின் வாக்குமூலத்தை மறுத்துவிட்ட நிரூபணம் தான் அது. நிகழ்ந்த வரலாற்றை புனைவாக்க முடியும். புளைவை ஜிலு ஜிலுப்பாய், பளபளவென்று செய்ய முடியும். செய்வதின் வழி விடுதலை வீரர்கள் வாழ்வின் தார்ப்பரியம் எதுவோ அதை மறைத்துவிட சாதாரணமாய் இயலும். தார்ப்பரியத்தை விட்டு மற்ற சுற்றுவட்டங்களில் அதிகார சக்திகள் கவனம் கொள்ளும் என்பதற்கு பாரதியார் இல்லம் ஒரு சாட்சி.
வீதி நடமாட்டம் அற்றுக் கிடந்தது. இயல்பாய் நடமாடிய காற்றை மதிய வெய்யில் அப்புறப்படுத்தியது. இறுக்கம் நிறைந்த தெருவின் தொடக்கத்தில் தனியாய் நின்றது அந்த வீடு. அந்த வீட்டுக்கு முதுகு திரும்பி உட்காந்திருந்தது ஊர். வீடு, வீடு இருந்த வீதி, வீதி நின்ற ஊர் ஒரு அசாதாரண நிலையை காட்சிப்படுத்தின. இரண்டு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஏழெட்டுவயசிருக்கும். அந்த வீட்டைக் காட்டிக்கேட்டோம்.
“இங்க ஊர்காரங்க யாரும் வர்றதில்லையா”
“வர்றதில்லே”
“ஏன் வரமாட்டாங்க”
“வந்தா பிடிச்சிட்டு போயிருவாங்க”
சட்டென்று புலப்பட்டது, வல்வெட்டித் துறையில் இராணுவம் நிலைகொண்டிருந்தது.
பதில் சொல்வதை விட சிறுவர்களுக்கு விளையாட்டில் மும்முரம் இருந்தது. பிறகு விளையாட்டைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு எங்களைப் பார்த்தார்கள் அவர்கள் பார்வையில் சந்தேகம் துளிர்த்திருந்தது. இவர்கள் யார்?, ஆமிக்காரங்களா? அமைதிப் படைக்காரங்களா?. சண்டையடித்துக் கொள்ளும் போராளிகள் குழுக்களைச் சேர்ந்தவர்களா?, அடுத்த கணமே அந்த இடத்திலிருந்து அவர்கள் பறந்து விட்டார்கள். சிறுவர்களிடம் ஒரு கேள்வி மீதி இருந்தது.
“பிரபாகரனை பார்த்திருக்கின்றீர்களா?”
எங்களைப் போல் சிலர் அந்த வீட்டை பார்த்துப் போயிருக்கலாம்.
வரலாற்றின் முக்கியமான சந்திப்பில் நின்றிருந்த அந்த வீட்டை இனிப் பலர் தரிசிக்க வரலாம். மாற்றி மாற்றி சிங்கள ஆமிக்கும், இந்தியப்படைக்கும் அந்த வீடுதான் தாக்கும் இலக்காக இருந்தது. அந்த இல்லம் பராமரிக்கப்படவில்லை. மொட்டையாய் சுவர்கள் ஆங்காங்கே மனிதக் கழிவுகள். சுவர்களில் சில கரிக்கோட்டு வாசகங்கள்.
“தம்பி பிரபாகரன் எனக்கு
அண்ணன் பிரபாகரன்”
“பிரபாகரன் என்றும் எம்முடன்”
- ஷாகிர், அ.மீரான் – கொழும்பு
இஸ்லாமிய சமுதாயம் போராளிகளை, போராளிகளின் தலைமையை ஏற்றுக் கொள்ளவில்லை. வெறுப்பின் எல்லைக்கும் அந்த எல்லையிலிருந்து எதிர்ச்செயற்பாடுகளுக்கும் போய்க்கொண்டிருக் கின்றது என்பன போன்ற நச்சு விதையை தூவி யபடி நடக்கின்றவர்கள் இருக்கின்றார்கள்.  இந்தப் புள்ளியில் நின்று நிதானித்து சொல்வதானால், அக நிலை முரண் பாடுகள் எல்லாக் காலகட்டத்திலும் இருக்கவே செய்யும். புறநிலையிலுள்ள பிரதான முரண்பாடுகளால் அகநிலை முரண்பாடு கூர்மையடையவே செய்யும்.
சுயநல விரும்பிகள் ஆதிக்கத்தினர் இந்தக் கூர்மையை ‘மட்டுமே’ இன்னும் கூர் படுத்திக்கொண்டே போவார்கள். அவர்களுக்கு ஆதாயம், அகநிலை முரண்பாடுகளைத் தீர்ப்பதில் சரியான வழிமுறையைக் கையாளுவதை விடுதலைச் சக்திகள் எப்போதும் மேலெடுத்துக் கொண்டிருப்பார்கள்.
இஸ்லாமிய சமூதாயத்தின் நிலைப்பாடு எதுவென்று ஒவ்வொருவராய் அணுகி விசாரிப்பதில் மேலான சாட்சிகளாக நாங்கள் இருக்கின்றோம் என்று கரிக்கோட்டில் பொறித்து வைத்திருந்தார்கள் ஷாகிரும், அ.மீரானும்.மானுடத்தின் தமிழ்க்கூடலின் போது வெளிவந்த புலிகளின் கலைபண்பாட்டுக் கழக ஆடி-ஆவணி – 2002 இதழ் அட்டை முகப்பில் ஒரு செய்தியைத் தாங்கியிருந்தது. சங்கிலி என்னும் தமிழ் மன்னனின் அரண்மனையின் எஞ்சிய எச்சம், மந்திரி மனையின் இன்றைய நிலையை அட்டைப் படம் தாங்கியிருந்தது. இன்றைக்கு அந்த வரலாற்று எச்சங்கள் வண்ணமிழந்து கிடந்தாலும், புராதன வரலாற்றுச் சின்னங்களைக் காப்போம் என்ற வாசகத்தால் எதிர்வரும் காலத்தில் வண்ணம் கொடுப்போம் என்பது புதிய நோக்காக வெளிப்பட்டது.

வரலாற்றின் ஆதாரங்களும் தொன்மையின் எச்சங்களும்தொலைந்து போகின்றனகாப்பது எம் கடமைஎன அந்த வாசகம் அறிவிப்புக் கொடுத்தது. வெளிச்சம் இதழ் அட்டையில் பிரபாகரனின் வீடு ‘தேசியத் தலைவர் பிறந்த இல்லம்’ என குறிக்கப்பட்டிருப்பதும் காண முடிந்தது. ‘இப்போது இந்தப் பகுதி உங்கள் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது. இதை நீங்கள் நினைவுச் சின்னமாக பராமரிக்கலாமே?’ கேட்டோம், சிங்கள ஆமி, இந்தியப் படை என மாற்றி மாற்றி வந்து வீட்டைத் தாக்குவார்கள்.
அவர்கள் தமது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வார்கள். என்னைக் கைப்பற்ற முடியாதபோது, என் வீட்டையாவது பிடிக்க முடிந்ததே என்ற திருப்தி. வரலாற்றுப் போக்கில் தீர்மானகரமாய் ஒரு முடிவு வருகிறவரை, அந்த வீடு அப்படியே இருக்கட்டும் என்பது பிரபாகரனின் விருப்பமாக இருந்தது என நாங்கள் அறிய முடிந்தது.
முதலில் யுத்தத்தை ஒரு இடத்தில் நிறுத்துவோம். ஒருமுறை யுத்தம் கட்டிப் போடப்பட்டுவிட்டால், பின்னர் இன்னொருமுறை அது மூர்க்கம் கொண்டு எழாதபடி தீர்வுகாணப்பட வேண்டும். அப்போது எனது இல்லத்தை பராமரிக்க முன்வரலாம் என்பது அந்தப் போராளியின் உள்ளக் கிடக்கை எனக்கண்டபோது வியந்தோம்.
இன்று சமாதானப் பேச்சு, அமைதி இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு, மாவீரர் துயிலுமிடங்களை, புலேந்திரன் போன்ற மாவீரர்களின் சிதைக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை புதுப்பிக்கும் பணியில் தீவிரப்பட்டுள்ள முனைப்பு.
ஒரு தலைமைப் போராளியின் இல்லத்தை மொட்டையாய் விட்டிருக்கிறதே என்ற வியப்பு, கேள்விக்குறியாக எழுகிறது. அந்த வீடு அனாதியாய் இரவும் பகலும் கிடப்பது போல் தெரிகிறது. உடைந்த மேற்கட்டுமானத்துடன், மொட்டைச் சுவர்களுடன் மல்லாக்கப் பார்த்து வானத்துடன் பேசிக்கொண்டிருக்கிறது. இந்த யுத்தம் தீர்ந்து விட்டாலும் அது அப்படியே பேசிக்கொண்டிருக்கும்.
தங்கள் குடையின் கீழ் தமிழீழம் வந்தபிறகும், வல்வெட்டித்துறை வட்டாரம் வந்தபிறகும் அந்த வீட்டை புதிதாகக்கட்டிப் புதுப்பிக்க வேண்டிய அவசியமிருக்காது. அப்படியே விட்டு விடுங்கள் என அவர் தனது இல்லத்தை மட்டுமே சொல்ல முடியும். வாழ்வதற்குத் தகுதியானதாக மாற்றப்படு வதை விட, வரலாற்றைப் பார்ப்பதற்கான கண்ணாடியாக அது நிற்கும், வசிப்பதற்குத்தோதாய் மாற்றப் படுவதிலும் மேலாக, வரலாற்றை வாசிக்கும் முக்கிய எழுத்தாய் நிற்கும்.
பா.செயப்பிரகாசம்
எழுத்தாளர், இலக்கிய செயற்பாட்டாளர், விமர்சகர்.
தமிழகம்.

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை