வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Saturday, January 7, 2012

தலைவர் பிரபாகரன் தொடர் 5

 

‘சேலத்துக்குப் போய்விடலாம்’ என்று குட்டிமணி சொன்னார். அவர் தயாராக இருந்தார். தங்கதுரைக்கும்கூட அதுதான் அப்போது விருப்பம். சேலத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கக் காரணம் என்னவென்று சரியாகத் தெரியவில்லை. நண்பர்கள் அங்கே இருந்திருக்கலாம். வேறு ஏதாவது பணிகள் இருந்திருக்கலாம். பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் இருந்திருக்கலாம்.

ஆனால் பிரபாகரனுக்கு விருப்பமில்லை. சேலம் சென்று என்ன செய்வது? வெறுமனே ஊர் சுற்றுவது தவிர வேறு எந்தப் பயனுமில்லை. தப்பித்து வந்தது, பதுங்கியிருப்பதற்காக என்று அவர் கருதவில்லை. செயல், செயல் முக்கியம். ஏதாவது செய்தாக வேண்டும். மிகத் தீவிரமாக இயங்கவேண்டிய தருணம் என்று தனக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டார். ஒரு தாற்காலிக ஏற்பாடாகவே தமிழகப் பயணத்தை அவர் எண்ணினார். சில நாட்கள் சென்னைக்குச் சென்று தலைவர்களைச் சந்திப்பது அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. யாராவது உதவ வேண்டும் அதற்கு. யார்?
ஒரு செய்தி வந்திருந்தது. அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து தப்பித்த செட்டி தனபாலசிங்கம் மயிலாப்பூரில் வசித்துக்கொண்டிருக்கிறான்.
அடடே அப்படியா என்றார் பிரபாகரன். செட்டியை அவருக்குத் தெரியும். வெகு நன்றாகத் தெரியும். அவனது சகோதரன் செல்லக்கிளியையும் தெரியும். செட்டியின் பெற்றோர், உறவுக்காரர்கள் அனைவரையும் தெரியும். செட்டி ஒரு மாதிரியான ஆள். ஒரு மாதிரி என்றால், உள்ளூர் கிரிமினல் என்று பொருள். கொள்ளைத் திட்டங்களில் ஆர்வம் கொண்டவன். அவனது வயதை ஒத்த தமிழ் இளைஞர்கள் பலர் விடுதலை வேட்கையுடன் ஆயுதம் ஏந்திய சமயம், எந்த வங்கியில் கைவைக்கலாம் என்று மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தவன். போராளி இளைஞர்கள் தமது செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அரசு வங்கிகளில் கொள்ளையடிப்பதை தமக்குத்தாமே அனுமதித்துக்கொண்டதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு வரிசையாகக் கைவரிசை காட்டுவதில் மும்முரமாக இருந்தவன்.
விடுதலை, தமிழர் நலன், மேலான சகவாழ்வு, சுதந்தரக் காற்று குறித்தெல்லாம் செட்டிக்கு எக்காலத்திலும் அக்கறை கிடையாது. போராளி இளைஞர்கள் வங்கிக்கொள்ளைகளில் ஈடுபடுகிறார்களா? நல்லது. அவர்கள் கொள்ளையடித்த பணத்தில் ஆயுதம் வாங்கிக்கொண்டு போகட்டும். நான் கூடச் சென்று என் பங்குக்குக் கொஞ்சம் அடித்துக்கொள்கிறேன். எனக்கு ஆயுதம் வாங்க வேண்டாம். ஆனால் ஆகவேண்டிய காரியங்கள் வேறு பல உண்டு.
பிரபாகரனுக்கு இது தெரியும். செட்டி அப்படித்தான். அவனைத் திருத்த முடியாது. அது வேறு வார்ப்பு. ஆனாலும் பழகுவதற்கு நல்லவன். பலமுறை உடன் உட்கார்ந்து பேசியிருக்கிறான். போராளி இளைஞர்களின் பல காரியங்களுக்கு அவ்வப்போது உதவிகூட செய்திருக்கிறான். யாழ்ப்பாணத்தில் அவனைத் தெரியாத போராளிகள் கிடையாது. குட்டிமணி, தங்கதுரை தலைமுறையைச் சேர்ந்தவர்களிலிருந்து பிரபாகரன் தலைமுறைக்காரர்கள் வரை அனைவர் மத்தியிலும் அவன் பிரபலம். மாணவர் பேரவை, இளைஞர் பேரவை உறுப்பினர்களுக்கெல்லாம் கூட அவனைத் தெரியும்.
தெரியுமே தவிர யாரும் மதிக்கமாட்டார்கள். பார்த்தால் ஒரு வணக்கம். நீ சுகமா, நான் நலம். தீர்ந்தது விஷயம். சற்று ஒதுங்கியே இருப்பது வழக்கம்.
பிரபாகரனும் அப்படித்தான். ஆனாலும் இந்தச் சமயத்தில் மயிலாப்பூரில் செட்டி வந்து தங்கியிருப்பது ஒரு முக்கியமான செய்தி. சென்னைக்குப் போகும் எண்ணத்தில் இருந்த பிரபாகரனுக்கு அது ஒரு நல்ல செய்தியாகவும் பட்டது. குறைந்தபட்சம் தங்கிக்கொள்ள ஓரிடம். போதாது?
பிரபாகரன் வேதாரண்யத்திலிருந்து பஸ் ஏறிப் புறப்பட்டு மயிலாப்பூர் வந்து சேர்ந்தார்.
அதற்குள் அவர் செட்டியுடன் சென்று சேருவது பற்றி, பெரியஜோதி சேலம் சென்றிருந்த தங்கதுரைக்கும் குட்டிமணிக்கும் தகவல் சொல்லி விட்டார்.
அவர்கள் அதிர்ந்து போனார்கள். உடனே பிரபாகரனைத் தொடர்பு-கொண்டார்கள். தம்பி வேண்டாம். அவன் ஆபத்தானவன். தவிரவும் உன்னுடைய நோக்கத்துடன் ஒத்துப்போக முடியாதவன்.
அப்படியா? செட்டி பிரபாகரனுடன் வேறு விதமாகத்தான் பேசிக்-கொண்டிருந்தான். நீங்கள் எல்லோரும் என்னைத் தவறாகப் புரிந்து-கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அக்கறை இருக்கிறது. எனக்கும் போராட்டத்தில் ஈடுபாடு இருக்கிறது. நம் மக்களின் நல்வாழ்வின்மீது ஈடுபாடு இருக்கிறது. யாழ்ப்பாணம் திரும்பியபிறகு நீ வேறு செட்டியைப் பார்க்கப் போகிறாய், பார்.
பிரபாகரனிடம் இயல்பாக ஒரு வழக்கம் உண்டு. அவரால் எந்தக் கூட்டத்திலும் சகஜமாக இருக்கமுடியும். ஆனால் எந்தக் கூட்டத்தின் சட்டைச் சாயமும் தன்மீது ஒட்டாமல் பார்த்துக்கொள்வார். பின்னாளில் `டெலோ’வாக உருப்பெற்ற தங்கதுரையின் நண்பர் வட்டத்தில் இருந்தபோதும் பிரபாகரன் தனது தனித்துவத்தை விட்டுக்கொடுத்ததில்லை. செட்டி போன்ற கிரிமினல்களுடன் தொடர்பு இருந்தாலும் தனது லட்சியத்தை மாற்றிக்கொண்டதில்லை.
இதோ பார் செட்டி, வங்கிக்கொள்ளை உனக்கு மிகுந்த கிளுகிளுப்புத் தருகிறது என்பதை நான் அறிவேன். கொள்ளையடிப்பது என் நோக்கமல்ல. ஆனால் இயக்கம் நடக்கப் பணம் வேண்டும். வங்கியில் இருப்பது மக்கள் பணமல்லவா என்று கேட்காதே. அது அரசாங்க வங்கி. கொள்ளையுடன் நீ தேங்கிப் போவதால் நீ கிரிமினல் என்று கருதப்படுகிறாய். பணமே இல்லாது போனாலும் என் செயல்பாடு நிற்கப்போவதில்லை. வித்தியாசம் புரிகிறதா?
நிறையப் பேசினார்கள். யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிய பிறகு என்ன-வெல்லாம் செய்யவேண்டும் என்று பேசிப்பேசித் திட்டமிட்டார்கள். திட்டங்கள் செயல்படுத்தப்படத் தேவையான பணத்துக்குத் தானே பொறுப்பு என்று செட்டி சொன்னான். வேறென்ன? வங்கிக்கொள்ளைதான்.
1974-ம் ஆண்டு மத்தியில் பிரபாகரன் மீண்டும் இலங்கைக்குத் திரும்பிச் சென்றார். பரபரவென்று காரியங்கள் நடைபெறத் தொடங்கின. சாத்வீகிகள் அங்கே தபால் தலைப் போராட்டம் என்று ஒன்றை நடத்திக்கொண்டிருந்த போது, பிரபாகரன் தனது நண்பர்களை அழைத்தார்.
காத்திருந்தது போதும் நண்பர்களே. நாம் தொடங்கலாம் என்று சொன்னார். ஒரு பக்கம் வங்கிக்கொள்ளைகள் ஆங்காங்கே நடைபெற்றன. பொறுப்பு செட்டியுடையது. பிரச்னையே அங்குதான். இயக்கப் பணிகளுக்காக என்று சொல்லிவிட்டு நடத்திய கொள்ளைகளில் பாதிப் பணம் வந்து சேரவே இல்லை. அடடே, செட்டி கார் வாங்கிவிட்டானாமே? அப்படியா? அவன் பளபளவென்று சில்க் சட்டை போட்டுக்கொண்டு போகிறான், கமகமவென்று செண்ட் அடித்துக்கொண்டு வருகிறான் என்று ஆளுக்கொரு தகவல் சொன்னார்கள்.
பிரபாகரனுக்கு வெறுப்பாக இருந்தது. ம்ஹும். சிலரைத் திருத்தமுடியாது. அதற்காக வருத்தப்பட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதில் அர்த்தமில்லை. சரி, நாம் குண்டு வைக்கலாம் என்று எழுந்தார்.
ஒரே நாள். ஒரே சமயம். யாழ்ப்பாணத்தின் முக்கியமான ஒரு கடைவீதி, ரயில்வே ஸ்டேஷன், ஒரு போலீஸ் ஸ்டேஷன் என்று தேர்ந்தெடுக்-கப்பட்ட சில இடங்களில் பிரபாகரன் வைத்த குண்டுகள் வெடித்தன. சிறீமாவோ பண்டாரநாயகா திரும்பி உட்கார்ந்து வடக்கிருக்க ஆரம்பித்தார்.
உண்மையில் பிரபாகரனுக்கு அப்போது பொது அமைதிச் சீர்குலைவு நோக்கமாக இருக்கவில்லை. அவரது இலக்கு வேறு. ஒரு பெரும் படுகொலையைத்தான் தொடக்கப்புள்ளியாக மனத்தில் குறித்து வைத்திருந்தார். முதல் அத்தியாயத்தில் பார்த்த ஆல்ஃப்ரட் துரையப்பா. நிச்சயமாக ஒழிக்கப்படவேண்டிய கிருமி என்று தீர்மானம் செய்திருந்தார்.
அந்த வருடம் ஜனவரியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று காவல் துறையும் நகர மேயரான துரையப்பாவும் இணைந்து நடத்திய களேபரத்தில் ஒன்பது தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருந்தனர். தமிழர்கள் அத்தனை பேரின் வெறுப்பும் அவர் பக்கம் திரும்பியிருந்தது.
துரையப்பாவின் கணக்கைத் தீர்த்ததுதான் பிரபாகரனின் வெளியே தெரிந்த முதல் செயல். அதன்பிறகு அவரது `புதிய தமிழ்ப் புலிகள்’ புதிய வேகம் கொண்டு இயங்க ஆரம்பித்துவிட்டது. 1976 மே 5-ம் தேதி பிரபாகரன் இயக்கத்துக்கு வேறு பெயர் வைத்தார். தமிழீழ விடுதலைப் புலிகள். புதிய விதிமுறைகள் வகுத்தார். புதிய ஒழுக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
பழைய அமைப்பில் இருந்த பிசிறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டன. சரி செய்ய முடியாதவை களையப்பட்டன, செட்டியைப் போல.
(தொடரும்)

8 comments:

  1. இந்த தளம் பொய்யான தரவுகளையும், உண்மைக்கு பிறம்பான நிகழ்வுகளும் உள்ளடக்கி உள்ளது. வாசகர்களே.. கவனமாக வாசித்து உண்மைகளை அறிந்துகொள்ளுங்கள். நன்றி

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கு நன்றி ..பாராட்டுக்கள் இதை நாம் எதிர்பார்த்ததுதான் ...உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன ...தாரளமாக சொல்லுங்கள் ...

    ReplyDelete
  3. அட்டகாசமான தலையங்கம் அதற்க்கு ஏற்றாற்போல் இளைய நெஞ்சங்களுக்கு நஞ்சைக்கக்கும் அதிரடி வசனங்கள். சும்மா கிடக்கும் பிரச்சனைகளை ஊதி ஊதி பெருசு பண்ணுவதே உங்கள் போன்ற விசமிகள் தான் என்பது கட்டுரையில் பொருள் எமக்கு குறிக்கிறது. மேதகுவின் இனவெறிக்கொலைத் தத்துவமே போதுமென்றிருக்கும் உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் புராணங்கள் தான் கைகொடுக்குமே தவிர இன்று ஒவ்வொருவராலும் எழுதும் கட்டூரைகள் அல்ல என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன். பிரபாகரனின் பொய் பரப்புரைகளை நம்பி ஒரு ஈழக்கனவை தங்கள் நெஞ்சில் சுமந்து கொண்டு போர்க்களத்தில் உயிர்நீத்த அந்த மாவீரர்களை நான் மதிக்கிறேன் என்று அறிக்கை விட்டதோடல்லாமல் இன்றுவரை சரணடைந்த புலிகள் உறுபினர்களுக்கு மன்னிப்பளித்து அவர்கள் புனர்வாழ்விற்காக குரல் கொடுக்கும் ஒரு மனிதரையும்..அழிந்து கொண்டிருக்கும் தனது பிறந்த பிரதேசத்து இளம் சமுதாயம் ஒன்று வீணாக ஒரு தற்பெருமைக்காரனின் சுயநல எண்ணத்திற்காகவும் பாசிச சிந்தனைத் திட்டங்களுக்காகவும் தங்கள் இன்னுயிரையும் எதிர்காலத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து அவர்களை விட்டு விலகி தனது கடந்தகால செயற்பாடுகளுக்காக மனம் வருந்தி அதற்குப் பிராயச்சித்தமாக அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கியாவது தனது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பி இன்று செயல்பட்டுக் கொண்டிருப்பவரையும் நீங்கள் துரோகிகள் என்று கூறுவதை நான் ஏற்றுக்கொள்வதற்கில்லை. ஏனெனில் உங்கள் பாசிசத் தலைவன் ஒருவனே அவன் மரணத்தின் பின்னும் தமிழர்களுக்கு தலைவனாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றுவதற்காகவும் மற்றும் தமிழர்கள் பிறிதொருவரை தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்வதை வெறுக்கும் ஒருவரான நீங்கள் வழங்கும் இந்தத் துரோகிப் பட்டங்களை நான் மட்டுமல்ல இன்று விழித்தெழுந்து கொண்டிருக்கும் எந்தத் தமிழர்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இதற்காக நான் அரசாங்கத்தையோ வேறு தனி நபர்களையோ ஆதரிப்பதாகவோ நீங்கள் எண்ணினால் அதற்கு நான் பொறுப்பல்ல. என் பரம விரோதியாக இருந்தாலும் நான் நேசிக்கும் இலங்கைத் திரு நாட்டிற்கும் அங்கு வாழும் சகல மக்களின் சமாதானமான சுதந்திர வாழ்க்கைக்காகவும் செயல்படுபவர்களை போற்றுவதற்கு என் பேனா என்றுமே தயங்கியதில்லை அதேபோல எனது இந்த நல்லெண்ணத்திற்கு எதிராக செயல்படுவர்கள் என் உடன்பிறந்த சகோதரனானாலும் ஈன்றெடுத்த பெற்றோரானாலும் அவர்களுக்கு எதிராக எழுத என்றுமே என் பேனா மயங்காது என்பதையும் உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் கூறிவைக்க விரும்புகிறேன்.

    இறுதியாக என் பணிவான வேண்டுகோள்:..
    வட்ட நிலா காட்டி வட்டிலிலே சோறூட்டி நெற்றியிலே முத்தமிட்டு தம் மழலைகளை தொட்டிலிலே இட்டு தாலாட்டித் தூங்கச் செய்த நம் தாயினங்களை மாலை வந்துவிட்டால் தங்கள் செல்வங்களுடன் மூலை முடுக்குகளில் முடங்கிக் கிடக்க வைத்த முற்றும் அறிந்தவர்களே!! காலையில் கடமைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பி மனைவி கொடுத்த தேனீரைச் சுவைத்தபடி முற்றத்துத் தென்றலை முற்றிலும் ரசித்தபடி பத்திரிகைச் செய்திகளில் மூழ்கிவிடும் நம் குடும்பத் தலைவர்களை உங்கள் பயங்கரவாதச் செய்கைகளால் நிலைதடுமாறச் செய்து இனித் தன் குடும்பத்தின் எதிர்காலம் எப்படியிருக்குமோ என்று கலங்கச் செய்து அவர்களை வேதனையில் மூழ்கவிட்ட மூதறிஞர்களே!. பரீட்சைக்கு படிக்கும் மாணவர்களை விளக்கை அணைத்து வேளைக்கே படுக்கைக்கு அனுப்பி அவர்கள் கல்வியைச் சீரளித்த சீமான்களே! எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு தமிழர்களின் இயல்பான ஒரு இனிய குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்து ஈழப்பிறவிகளின் இனங்காக்க புறப்பட்ட ஈனப்பிறவிகளே!

    உங்கள் இழி செயலால்..உங்கள் கொடிய கொள்கைகளால்… கொலைவெறியும், கொன்றொழிப்புகளும், குண்டு வெடிப்புகளும், குழப்பங்களும் கோரதாண்டவம் ஆடியதே.. எங்கள் இலங்கைத் திருநாட்டில் உங்கள் இனவெறிக்கும் உங்கள் பகட்டுக்கும், பதவிகளுக்கும், உங்கள் பணப் பைகளை நிரப்புவதற்கும் எங்கள் தமிழினத்தையே கொன்றொழித்து இனியும் போராட்டம் என்ற பேசி எங்கள் எஞ்சிய தமிழினத்தை அழித்து விடாதீர்கள் என்று உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். பாவம் அவர்களை வாழ விடுங்கள்..!!!

    ReplyDelete
  4. அன்புள்ள தமிழ் உள்ளங்களுக்கு,



    தமிழ் ஈழத்தில் நடந்த கொடூரங்களை
    இந்த ஞாபக மறதி உலகம் மறக்கும் முன்பு
    மீண்டும் உலக அளவிலான
    நீதி கேட்கும் போராட்டம் இடைவிடாது
    நடைபெற வேண்டும்.

    நான் Change.org பக்கத்தில் ஒரு நீண்ட
    உண்மைக் கடிதம் பதிவு செய்துள்ளேன்.
    http://www.change.org/petitions/-president-of-the-eu-un-ukus-france-foreign-ministers-tamils-need-justice-2?share_id=BUqQMNMRxi&

    உடனே அதில் கையெழுத்திடுங்கள்.
    உங்கள் நண்பர்களையும் கையெழுத்திட வையுங்கள்.
    அதனை மேலே சொன்ன வல்லரசு நாடுகளுக்கு
    தொடர்ந்து அனுப்புங்கள்.
    மேலும், கனடா, ஆஸ்திரேலியா, மற்றும்
    பிற ஐரோப்பிய நாடுகளுக்கும்
    தொடர்ந்து அனுப்புங்கள்.

    இது நாள் வரை நான் மட்டுமே அனுப்பினேன்,
    அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
    நீங்களும் அந்த பணியைத் தொடருங்கள்.

    அந்தக் கடிதம் காண இயலாதவர்கள்
    எனக்கு Message அனுப்புங்கள்.

    அன்புடன் ,
    வே.பழனி.

    ReplyDelete
  5. தேநீர் பூக்கள்..உங்கள் கருத்திற்கு நன்றி ,....இந்த இணையத்தை ஐயாயிரம் மேற்பட்ட பார்வையாளர்கள் நீங்கள் கருத்து சொல்லும் முன்பே பார்வையிட்டு சென்றுவிட்டார்கள் ..இந்த ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்களில் ..உங்களோடு சேர்த்து முன்று உறவுகள் மட்டுமே ..எதிர் கருத்து பதிவு செய்துள்ளார்கள் ..உங்கள் முன்று பேருக்காக நாங்கள் எங்களை முடக்க முடியாது நீங்களே முடங்கி கொள்ளுங்கள் ...நன்றி உங்கள் கருத்துக்கு

    ReplyDelete
  6. நன்றி பழனி அண்ணா நானும் செய்கிறேன் இதை பார்க்கும் உறவுகளும் பண்ணுவார்கள் ...

    ReplyDelete
  7. ஈழம் தேவதை

    ///தேநீர் பூக்கள்..உங்கள் கருத்திற்கு நன்றி ,....இந்த இணையத்தை ஐயாயிரம் மேற்பட்ட பார்வையாளர்கள் நீங்கள் கருத்து சொல்லும் முன்பே பார்வையிட்டு சென்றுவிட்டார்கள் ..இந்த ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்களில் ..உங்களோடு சேர்த்து முன்று உறவுகள் மட்டுமே ..எதிர் கருத்து பதிவு செய்துள்ளார்கள் ..உங்கள் முன்று பேருக்காக நாங்கள் எங்களை முடக்க முடியாது நீங்களே முடங்கி கொள்ளுங்கள் ...நன்றி உங்கள் கருத்துக்கு///

    இணையம் ஒன்று இருப்பின், நாலுபேர் நான்கு விதமாக கருத்து எழுதத் தான் செய்வார்கள். அது தவிர்க்க இயலாத ஒன்று!!! நீங்கள் நினைப்பதைப் போன்று ஈழத்துக்கு ஆதரவாக பேசுபவர்களும் உண்டு. அது போல் பிரபாகரன் போன்ற பாசிஷ வாதிகளை வெறுப்பவர்களும் உண்டு. நான் தங்களின் இணையதளத்தை முடக்க வரவில்லை. அது எனக்கு தேவையற்ற விடயமும் கூட. அத்துடன் பாசிசவாதிகளின் இணையதளங்களை எங்கு காண்கிறேனோ அங்கும் பல பதிவுகள் பதிகிறேன். அத்துடன் தொந்தரவுக்கு மன்னிக்கவும். நன்றி

    ReplyDelete
  8. உங்களை கருத்துக்கள் சொல்ல வேண்டாம என்று நான் குறைவில்லையே நீங்கள் ..தாரளமாக கூறுங்கள் ...உண்மையை மட்டும்

    ReplyDelete

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை