வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Sunday, December 4, 2011

தத்தளிக்கும் தமிழக மீனவர்கள்

புவி வெப்பம், பருவநிலை மாறுதல்களால் கடல் வெகுவாக மாறிவரும் இன்றைய சூழ்நிலையில் தமிழக மீனவர்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாகியுள்ளது. இயற்கையின் சீர்கேடு மீனவனின் வாழ்வில் கொஞ்சம் மண்ணை அள்ளிப் போட்டால் அரசாங்கமும், அதன் திட்டங்களும் அவன் வாழ்வில் மேலும் மண்ணை அள்ளிப் போடுவதென்பது கொஞ்ச நஞ்சமல்ல.

1959-ல் தான் இந்தியாவிலேயே முதன் முதலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் கிராமத்தில் மீனவர்களுக்கு அரசின் சார்பில் விசைப்படகு வழங்கப்பட்டது. கட்டுமரங்களில் மட்டுமே மீன் பிடித்துப் பழக்கப்பட்ட தமிழக

மீனவர்கள் அரசின் விசைப்படகை வாங்க அவ்வளவாக ஆர்வம் காட்டாததால் 10 விசைப்படகுகள் மட்டுமே வழங்கப்பட்டன. தமிழகத்தில் பாரம்பரிய மீன்பிடி முறை மாறத்தொடங்கியது இதிலிருந்துதான். குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே சென்று போதுமென்ற அளவிற்கு மீன்பிடித்த மீனவர்களிடையே விசைப்படகு அறிமுகமானதும் உள்ளூர் தொழிற்போட்டி உருவானது. தமிழகத்தில் அறிமுகமான விசைப்படகுத் திட்டம் பிறகு படிப்படியாக இந்தியாவின் ஒன்பது கடலோர மாநிலங்களுக்கும் அறிமுகமானது.

உள்ளூர் தொழிற்போட்டியைச் சமாளித்த தமிழக மீனவர்கள் இன்று இந்தியக் கடலில் மீன்பிடிக்கும் பன்னாட்டுப் பெருமுதலாளிகளிடம் போட்டிபோட முடியாமல் திணறிவருவதை பார்ப்பதற்கு முன்பாக, மீனவர்களை இந்திய அரசு இழிவுபடுத்தும் விதத்தைப் புரிந்து கொள்வது நல்லது. 2006-ல் ஏற்பட்ட ஆழிப்பேரலை மீனவர்களின் படகை மட்டும் புரட்டிப் போடவில்லை, அவர்களது வாழ்வையும்தான். ஆழிப்பேரலையைக் காரணம் காட்டித்தான் மீனவர்கள் கடற்கரையை விட்டு முதன் முதலாக அப்புறப்படுத்தப்பட்டார்கள். இப்படி வெளியேற்றுவது என்பது மீனவர்களின் உயிர்காக்கவே என்று சொல்லிக் கொண்டாலும் உண்மையில் கடலிலிருந்து மீனவனை அன்னியப்படுத்தும் சூழ்ச்சி இதில் உள்ளது.

கரையிலிருந்து மீனவர்களை 500 மீட்டர்களுக்கு அப்பால் வெளியேற்றுவதற்குக் காரணங்கள் : 1) பெரும் துறைமுகங்களுக்காக 2) நட்சத்திர விடுதிகளுக்காக 3) மீன் பிடி பகுதியைத் துறைமுகமாக்கி பன்னாட்டுப் பெரு முதலாளிகளுக்கு வழங்குவது. 4) கடற்கரையை முற்று முழுதாகக் கவர்வது. 5) கடலை முற்றுகையிடுவது. 6) ஏகபோகம் 7) பன்னாட்டு நிறுவனங்கள் கடலின் நிலத்தடி வளங்களைச் சுரண்ட அனுமதி 8) கடலடி நிலத்தை குத்தகைக்கு விடுவது - போன்ற நாசகார வேலைகளால் தமிழக மீனவர்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாகி உள்ளது.


1. அணு உலைகளும், இரசாயன ஆலைகளும்:
அணுக்கழிவும், இரசாயனக் கழிவும், சாயக்கழிவும் ஒன்றாய் கைகோர்த்து கடலில் சங்கமிக்கும் இம்முக்கூட்டு கழிவுகளால் மூச்சு முட்டுவது கடலுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் மட்டுமல்ல நமது மீனவர்களுக்கும்தான்.

தமிழ்நாட்டில் சிறிய, பெரிய 33 ஆறுகள் கடலில் இணைகின்றன. ஆறு கடலில் இணையும் பகுதியைக் கழிமுகப்பகுதி என்றழைக்கிறோம். கடல் வாழ் உயிரினங்களின் முக்கிய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வன இந்தக் கழிமுகப்பகுதிகளே. மலையில் தொடங்கும் ஆற்றின் பயணம் சமவெளியில் ஊடாடி கடலில் நிறைவடைகிறது. நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், சிலிகான் சத்துக்களை உள்ளடக்கிய உணவுப் பொருட்களும், உயிரினங்களும் ஆற்றின் மூலம் கடலுக்கு வந்து சேருகின்றன. இவையே மீன்களுக்கும், பிற கடல்வாழ் உயிரினங்களுக்கும் உணவாகின்றன.

கடலில் 200 மீட்டர் ஆழம்வரை மட்டுமே சூரிய வெளிச்சம் பாய்கின்றது. வெளிச்சப் பகுதியிலேயே கடல்வாழ் தாவரங்கள் வளரும். இவை பெரும்பாலும் கரையோரப் பகுதிகளாகவே இருக்கும். கடற்தாவரங்களை உணவாக உட்கொள்ள கடல் உயிரினங்கள் மிகையாக கரையோரப் பகுதிகளிலேயே வசிப்பது வழக்கம். ஆனால், மேற்சொன்ன வெப்பக் கழிவுகள் கடலில் கலப்பதால் கடல்வாழ் தாவரங்கள் அழிந்தும், மீன்கள் செத்தும் மிதக்கின்றன. அறிய வகை மீன்கள் இடம் பெயர்கின்றன. இதனால் முதலில் பாதிக்கப்படுவது கட்டுமர மீனவர்கள்தான். மூன்றரை கடல்மைல் மட்டுமே கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதால் வலையோடு சென்றவர்கள் மீன் இல்லாமல் கவலையோடு கரை திரும்புகின்றனர். இதனால் பாரம்பரிய மீன்பிடித் தொழில் அழிந்து வருகின்றது. விசைப்படகு இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


2. பன்னாட்டு மீன்பிடி முதலாளிகள்
ஒரு கடல் மைல் என்பது 1.8 கி.மீ. ஆகும். மாநில அரசுகளுக்கு 12 கடல் மைல்களுக்கு மட்டுமே உரிமையுண்டு (மீன்பிடிக்க மட்டும்). இது பிரதேசக் கடல் எனப்படும். அடுத்த 12 கடல் மைல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். இது கண்காணிப்புப் பகுதி எனப்படும். கரையிலிருந்து 200 கடல்மைல் எல்லைவரை முற்றுரிமைப் பொருளாதார மண்டலம் எனப்படும். 200வது கடல்மைலின் முடிவில் சர்வதேசக் கடல் எல்லை தொடங்குகிறது. இதன் பிறகும் வேறு நாடுகள் இல்லாவிட்டால் அடுத்த 150 கடல்மைல் வரை ஒரு நாட்டிற்கு உரிமையுண்டு. அதற்குப் பிறகு சர்வதேசக் கடல் எல்லை தொடங்கும்.

மேற்சொன்ன அனைத்துக் கடற்பகுதிகளுக்கும் சென்று மீன்பிடிக்க 1991ல் இருந்து பன்னாட்டு முதலாளிகளுக்கு மத்திய அரசு உரிமை வழங்கியது. இந்தியாவில் கடலோர மாநிலங்களான கிழக்கில் மேற்குவங்கம் தொடங்கி மேற்கில் குஜராத் வரையுள்ள 9 மாநிலங்களுக்கும் தனித்தனியே கடல்மீன்பிடி ஒழுங்காற்றுச் சட்டம் உள்ளது. இச்சட்டத்தின் மூலம் அந்தந்த மாநில அரசுகள் மீன்களின் இனப்பெருக்கக் காலம் என்று வெவ்வேறு மாதங்களில் மீன்பிடி தடைக்காலத்தை அறிவிக்கின்றன. ஆனால் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்கள் இந்தக் காலங்களிலும் மீன்களைப் பிடிக்கின்றன. இப்படி 200க்கும் மேற்பட்ட கப்பல்கள் இந்திய, தமிழகக் கடற்பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு உற்பத்தி விலைக்கே, அதாவது ரூபாய் 18க்கு மத்திய அரசு இவர்களுக்கு எரிபொருளையும் வழங்குகிறது.

இந்தியக் கடற்பகுதியில் மாதக்கணக்கில் தங்கி மீன்பிடிக்கும் பன்னாட்டு முதலாளிகள் பெரிதும் சுறாமீன்களுக்கே வலை விரிக்கிறார்கள். சாய்சதுர வடிவம் கொண்ட சுருக்குமடி என்ற வலையை விரித்து மீனை அள்ளுகிறார்கள். இது மட்டுமல்லாமல் செயற்கைக் கோள் உதவியுடன் மீன்கள் நிறைந்திருக்கும் பகுதியில் வலைவீசி மீன்களைக் கொள்ளையிட்டுச் செல்கிறார்கள். கடலில் இரவுடித்தனம் செய்யும் இவர்களிடம் மல்லுக்கட்ட முடியாமல் திணறி வருகிறார்கள் நம் மீனவர்கள்.


3. கச்சத்தீவு
தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத் தீவை, தமிழரின் ஒப்புதலின்றி இந்திய அரசு இலங்கைக்குத் தாரைவார்த்ததால் கன்னித்தீவு கதைபோல மீனவர்களின் துயரமும் தொடர்கிறது. ஆளரவமற்ற சிறு தீவுதானே என்ற ஆட்சியாளர்களின் சிறுமதியால் இன்று சிக்கிச் சின்னாபின்னப்படுபவர்கள் நமது மீனவர்கள்தான். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே இருப்பது சிறிய கடற்பகுதிதான் என்பதால் இங்கு சர்வதேசக் கடல் எல்லை குறித்தெல்லாம் கற்பனை செய்யத் தேவையில்லை. இருக்கும் கடலில் நீ பாதி நான் பதி என்பதுதான் சட்டம்.

தமிழக இராமேசுவரத்திற்கும் - இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே இருப்பது 20 கடல்மைல் என்று வைத்துக் கொள்வோம். இதில் கற்பனையாக கச்சத்தீவு என்ற ஒரு தீவு கடலில் இல்லாவிட்டால் ஆளுக்குப் பாதி என்ற அடிப்படையில் நமக்கு 10 கடல்மைல், இலங்கைக்கு 10 கடல் மைல் சொந்தமாகும். இந்த பத்தாவது கடல்மைல் பன்னாட்டுக் கடல் எல்லை என்றழைக்கப்படும். இப்போது கற்பனையிலிருந்து விடுபட்டு இயல்புக்குத் திரும்புவோம். இராமேசுவரத்திலிருந்து அடுத்த 5வது கடல்மைலில் நமக்குச் சொந்தமான கச்சத்தீவு இருப்பதாக வைத்துக்கொண்டால் கச்சத்தீவிற்கு அப்பால் உள்ள கடலின் அகலம் 15 கடல்மைல் மட்டுமே. ஆளுக்குப்பாதி என்ற அடிப்படையில் இலங்கைக்குச் சொந்தமாக ஏழரைக் கடல் மைல் மட்டுமே இருக்கும். நமக்கு இராமேசுவரத்திலிருந்து கச்சத்தீவு கடந்து மொத்தம் பனிரெண்டரை கடல்மைல் சொந்தமாக இருந்திருக்கும்.

கச்சத்தீவை நாம் இழந்ததால் நிலைமை தலைகீழாகிவிட்டது. இலங்கையின் வசம் இன்று கச்சத்தீவு இருப்பதால் கச்சத்தீவிற்கும் இராமேசுவரத்திற்கும் இடைப்பட்ட கடலின் தூரம் 5 கடல்மைல் என்றால் ஆளுக்குப்பாதி என்ற அடிப்படையில், நமக்கு இரண்டரை கடல்மைல் மட்டுமே சொந்தம். மொத்தமுள்ள 20 கடல் மைலில் இலங்கைக்கு பதினேழரை கடல்மைல் சொந்தமாகிவிட்டது.

396 ஏக்கர் பரப்புக் கொண்ட துண்டு நிலம்தானே கச்சத்தீவு என்று நிலத்தை மட்டுமே கணக்குப் பார்க்கத் தெரிந்த நாம், இன்று நில உரிமையை இழந்ததால் பத்து கடல்மைல் அளவிற்கு குறுக்கு நெடுக்கான கடலை இழந்து நிற்கிறோம். தமிழர்களின் பரம்பரை மண்ணான கச்சத்தீவை இழந்ததால் கடலின் உரிமையை இழந்து சிங்களக் கடற்படையால் தமிழின மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். சிங்களவர்களோடு இணைந்து சீனர்களும் இன்று கச்சத்தீவில் கால்பதித்து விட்டார்கள். கச்சத்தீவையொட்டிய கடற்பகுதியிலுள்ள கடலடித் தரையில் எண்ணெய் வளத்தைச் சுரண்டப் போகிறார்கள். கச்சத்தீவை மீட்டெடுப்பதன் மூலமே சிங்களச்-சீன அச்சுறுத்தலிலிருந்து தமிழக மீனவர்களையும், தமிழ்நாட்டையும், நம் கடல்வளத்தையும் காப்பாற்ற முடியும்.


4. மீன்பிடித் தடைக்காலம்
தமிழக அரசின் கடல் மீன்பிடி ஒழுங்காற்றுச் சட்டத்தின் மூலமாக ஏப்ரல் 15 முதல் மே 30 வரை தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்படுகிறது. மீன்களின் இனப்பெருக்கக் காலமென்று மேற்படி நாட்களை தமிழக அரசு வரையறுத்திருப்பதால் இத்தடை அமுலில் உள்ளது. இந்தியாவில் இதர கடலோர மாநிலங்களிலும் மீன்பிடித் தடைக்காலம் உண்டு என்றாலும், காலங்கள் மாறுபடுகின்றன. இத்தடையை மீறும் மீனவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் கடுமையாக அச்சுறுத்துகின்றனர். ஆனால் இதே காலக்கட்டத்தில் பன்னாட்டுக் கப்பல்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதுதான் புரியாத புதிராகும்.

பறவைகள் தன் இனப்பெருக்கத்திற்கு நாடு விட்டு நாடு செல்வதுபோல் மீன்களும் கடல் விட்டு கடல் செல்கின்றன. மேலும், மழைக்காலத்தில் மட்டுமே மீன்கள் இனப்பெருக்கம் செய்வதாக கடல் ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் கூறுகிறார்கள். கேரளாவில் தென்மேற்குப் பருவ மழைக்காலங்களான சூன் 15 முதல் சூலை 30 வரை மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் மலையாளிகள், தமிழகக் கடற்பகுதிக்கு வந்து மீன்பிடித்துச் செல்கிறார்கள். கேரளாவைப் பின்பற்றி தமிழ்நாட்டிலும் வடகிழக்குப் பருவமழைக் காலங்களான அக்டோபர், நவம்பரில் மீன்பிடிக்கத் தடைவிதிப்பதே அறிவுப்பூர்வமானதாகும். அது மட்டுமல்லாமல் மழைக்காலங்களில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அடிக்கடி புயலில் சிக்கிக் கொள்வதும் தவிர்க்கப்படும்.

தமிழகத்தில் பெரும்பகுதி கிழக்கிலும், சிறு பகுதி மேற்கிலுமாக 1076 கி.மீ. தூரம் நீண்டு கிடக்கும் நமது கடலைப் பாதுகாப்பதும், ஆபத்தான கழிவுகளைக் கடலில் கொட்டாமல் தடுப்பதும், பன்னாட்டு மீன்பிடிக் கப்பலை வெளியேற்றுவதும், கச்சத்தீவை உடனடியாக மீட்டெடுப்பதும் மீன்பிடித் தடைக்காலத்தை மாற்றியமைப்பதும் இந்திய - தமிழக அரசுகளின் உடனடிக் கடமையாக இருந்தால் மட்டுமே தமிழக மீனவர்கள் உயிர்பிழைக்க முடியும். வலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மீன்களின் எண்ணிக்கை குறைந்து விடாது என்ற வைரமுத்துவின் கவிதை வரிகளை மெய்யாக்கும் விதத்தில் வந்தவனுக்கெல்லாம் வாசல் கதவு திறந்துவிட்டால் தமிழரின் கடலும், கடல்வழியே நிலமும் பறிபோகும்.


"  - கா. தமிழ்வேங்கை"

நன்றி தென் செய்தி 

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை