வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, January 12, 2012

குட்டித்தீவில் குமுறல்கள் ஓயவில்லை!-02

 மகாவம்சமும்; மகிந்தவின் தமிழினத் துவம்சமும்!

“சர்வசித்தன்”
சுதந்திர இலங்கையின் ஒன்பதாவது வருடத்தில் (1957 ல்); ஈழத்தமிழர்களது அரசியல் கோரிக்கைகளில் சிலவற்றையேனும் வழங்கும் வகையில்; தமிழர்களது தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்; அதிக தொகுதிகளில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன், ஓர் உடன்படிக்கையினை ஏற்படுத்திக் கொண்டவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயகா.

இவ் ஒப்பந்தம்; ஈழத்தமிழர்களின் தாயகக் கோட்பாட்டினையும், அவர்கள் தமது பிரதேசங்களைத் தாமே (ஓரளவு) நிர்வகிக்கும் உரிமையினையும் வழங்குவதாக அமைந்திருந்தது.
சிங்களத் தலைவர் ஒருவர், தமிழ்த் தலைமையுடன் ஏற்படுத்திக் கொண்ட இவ் உடன்படிக்கை வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாயும் விளங்கியது எனலாம்.
ஆனால்,”பண்டா-செல்வா ஒப்பந்தம்” என அழைக்கப்பட்ட இந்த உடன்படிக்கை; அன்று எதிர்க்கட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியினாலும்,சில பௌத்த மத பீடங்களாலும் நிராகரிக்கப்பட்டு முடிவில் அதனை உருவாக்கியவராலேயே (பண்டார நாயகா) கிழித்தும் வீசப்பட்டது !
இத்தனைக்கும் அன்று அவ் உடன்படிக்கையினை உருவாக்கியவரான பண்டார நாயகா, இலங்கை; பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக இருந்த சமையத்தில்-அதாவது இந்த உடன்படிக்கை உருவாவதற்கு முப்பது வருடங்களுக்கு முன்பே 1926 ஜூலையில்; இலங்கையில் இருந்து வெளியான Ceylon Morning Leader (சிலோன் மோர்னிங் லீடர்) பத்திரிகையில் இலங்கையின் நிர்வாக முறைமை “கூட்டாட்சி” அமைப்பாக இருப்பதே ஏற்புடையது என்பதை வலியுறுத்திக் கட்டுரை ஒன்றினை எழுதியிருக்கிறார்!
அதில், “தமிழர்கள்; கரையோரச் சிங்களர்கள்; மலையகச் சிங்களர்கள் ஆகிய மூன்று சமூகப்பிரிவினர்களும் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இந் நாட்டில் வாழ்ந்து வந்த போதும்; அவர்கள்  ஒருவரோடொருவர் இணைந்துவாழ விரும்பவில்லை என்பதையே வரலாறு எமக்குக் காட்டுகிறது.
அவர்கள் தங்கள் மொழி,சமயம் மற்றும் பழக்கவழக்கங்களில் தனித் தன்மையினைப் பேணுவதால் இவையாவும் காலப் போக்கில் மறைந்து விடும் என ஓர் முட்டாள் மட்டுமே நம்பமுடியும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கை ஆங்கிலேயர்களது குடியேற்ற நாடுகளுள் ஒன்றாக இருந்த சமையத்தில் இவ்வாறான எண்ணப் போக்கினைக் கொண்டிருந்த அவர், இலங்கை சுதந்திரம் பெற்ற அடுத்த வருடமே, அன்று ஆட்சி அதிகாரத்தினைத் தமது கைகளில் வைத்திருந்த டி.எஸ்.சேனாநாயகாவின் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறிச் ஸ்ரீ லங்கா சுதந்திராக் கட்சியினை நிறுவினார்.
1956 ஆம் வருடத் தேர்தலின் போது, தமது கட்சி வெற்றி பெற்றால் இலங்கையின் ஆட்சி மொழி சிங்களமாக அமையும் என்னும் உறுதி மொழியினைச் சிங்களப் பெரும்பான்மை மக்களிடம் வழங்கினார்.
அவ்வாறே அவரது கட்சி அத் தேர்தலில் வெற்றி பெற்றதும், இலங்கை சிங்களருக்கு மட்டுமே உரியது என்னுமாப் போல் இலங்கையின் ஆட்சி மொழி சிங்களம் மட்டுமே என்னும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதனை எதிர்த்து காலிமுகத் திடலில் அறவழியில் தமது எதிர்ப்பினைத் தெரிவித்த தமிழ்த் தலைவர்களுக்கு அன்று பரிசாகக் கிடைத்தவை அரச காவலர்களது ‘குண்டான் தடி” அடிகளே என்பதை யாவரும் அறிவர்.
இதன் தொடர் நிகழ்வுகளாக அமைந்த தமிழர்களது அறவழிக் கிளர்ச்சிகள் காரணமாகவே 1957ல் “பண்டா-செல்வா” ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.
இதனை எதற்காக இங்கு குறிப்பிடுகிறேன் என்றால்…… இயல்பிலேயே நியாயம் அறிந்தவர்களாக; இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இரு வேறு இனங்களின் வரலாறும் அவர்களது தன் மானமும், பண்பாடும் தெரிந்தவர்களாக; இருக்கும் தலைவர்களே, தங்களது அரசியல் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டுத் தாம் அதுவரை கொண்டிருந்த, அல்லது நம்பியிருந்த உண்மைகளுக்கு எதிராகச் செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள் என்பதை விளக்கத்தான்…!
ஆரம்பத்தில் ஓர் பொதுவுடமைச் சிந்தனையாளனாக; சிங்கள-தமிழ்  இனங்களது நாடித்துடிப்பினை உணந்தவராக விளங்கிய பண்டார நாயகா; ஆட்சி அதிகாரத்தின் மீது கொண்ட மோகம்; சுதந்திர இலங்கையில் தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக மாற்றுவதற்கே வழி அமைத்தது!
இதே போன்று , 1990 களில் சிங்கள இளைஞர்கள் பலர் அன்றைய அரசினால் வேட்டையாடப்பட்ட போது, மனித உரிமைகளுக்காகக் குரல் எழுப்பிவந்த மஹிந்த ராஜபக்‌ஷ, தமது கையில் ஆட்சி அதிகாரம் கிடைத்த சமையத்தில் ஓர் இனத்தையே அழிக்கும் “மா பலி” அசுரனாக அவதாரம் எடுத்து… இன்று உலக நாடுகளின் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறார்.
இவ்வாறெல்லாம்…. இவர்கள் – அதாவது சிங்களத் தலைவர்கள்……. தமிழர்களுக்கு எதிராகச் செயல்படக் காரணம் யாது………?
இதன் விடை; புரியாத ஒன்றாக இருப்பினும்….. மகாவம்ச காலந் தொட்டே
இலங்கையின் பெரும்பான்மைச் சமூகத்தின் மனதில் ஊட்டப்பட்டுவந்த தமிழர் எதிர்ப்புணர்வு, காலங்காலமாக அந் நாட்டின் ஆட்சியாளர்களின் அதிகார வெற்றிகளுக்கு ஆதாரமாக இருந்து வந்துள்ளதைக் காணமுடியும்.
கி.பி ஆறாம் நூற்றாண்டில் மகாநாம தேரரால் தொகுத்து எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் ‘மகாவம்சம்’ சிங்கள அரச வம்சத்தினரது வரலாறு குறித்துக் கூறுவன அனைத்தும் ஆதார பூர்வமானவை அல்ல. எனினும் அதில் காணக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் இலங்கையில் சிங்கள இனம் உருவான நிகழ்வும், அது தனக்கென ஆட்சி அதிகாரங்களை வளர்த்துக் கொண்ட வரலாறும் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. சிங்களரைப் பொறுத்த மட்டில் அதுவே அவர்களது வரலாற்றுச் சிறப்பினைக் கூறும் நூல் என்னும் பெருமைக்கு உரியது !
இந்த மகாவம்சத்தின் இருபத்திரண்டாம் அத்தியாயத்தில் உள்ள 78 முதல் 88 வரையிலான வரிகள்; சிங்கள அரசனும், இன்றைய சிங்கள ஆட்சியாளர்கள் ; தமிழர்களை அடக்கி வெற்றி கொள்வதற்கு ஆதர்ச புருஷனாகவும் போற்றப்படும் “துட்ட கெமுனு” அல்லது காமினி அபயனது இளமைக் கால நிகழ்வு ஒன்றினைக் குறிப்பிடுகிறது.
அன்று இலங்கையின் களனி ராஜ்யத்தின் அரசனாயிருந்த காகவண்ணதீசனின்  இரு புதல்வர்களுள் ஒருவனான காமினி அபயனும்,அவனது சகோதரன் தீசனும் சிறுவர்களாக இருந்த சமையத்தில், அவர்களது தந்தை பௌத்த பிக்குகளை வரவேற்று அவர்களுக்கு விருந்தளிக்கிறான். அவர்கள் உண்டபின் எஞ்சிய உணவினைத் தேவப் பிரசாதமாக ஏற்கும் மன்னன் அதனைத் தனது இரு பிள்ளைகளிடமும் பகிர்ந்தளிக்க முற்படுகிறான்.  எனவே அதனை மூன்று பங்குகளாகப் பிரித்துத் தன் புதல்வர்களிடம் அளிக்கிறான்.
அவர்கள் அதனை உண்ணும்போது ஒவ்வொரு தடவையும் ஓர் உறுதி மொழியினை எடுத்துக் கொள்ளுமாறு பணிக்கிறான்.
முதல் பங்கினை உண்ணும் போது “ எமது சந்ததியினைப் பாதுகாக்கும் தூயவர்களான புத்த சாதுக்களை எப்போதும் போற்றுவோம். அவர்களது விருப்பங்களுக்கு எதிராக ஒருபோதும் செயல் படமாட்டோம்” எனவும்; இரண்டாவது பங்கினை உண்ணும் போது,” சகோதரர்களாகிய நாமிருவரும் என்றும் முரண்பட மாட்டோம்” எனவும்; மூன்றாவது பங்கினை உண்ணும் சமையத்தில்..” தமிழர்களோடு ஒருபோதும் போர் புரியோம்” எனவும் சங்கற்பம் செய்யும் படி கூறுகிறான்.
முதல் இரு பங்கினையும் தம் தந்தை கூறியவாறு ஏற்றுக் கொண்ட புதல்வர்கள்……  “தமிழர்களுடன் போர் புரியோம்” என்னும் மூன்றாவது வேண்டுகோளினை மட்டும் ஏற்றுக் கொள்ளாது சென்று விடுகிறார்கள். காமினி அபயனோ அதனைக் கோபத்தோடு வீசி எறிந்துவிட்டுத்  தனது இடத்துக்குச் சென்று , படுக்கையில் கைகளையும்,கால்களையும் மடக்கியவாறு படுத்துக் கிடக்கிறான்.
அவ்வாறு  கிடக்கும் தன் மைந்தனிடம் அதற்கான காரணத்தை அவனது தாயான விகாரதேவி கேட்டதற்கு… அவன்..” அம்மா.. இதோ இந்தப் பக்கம் சமுத்திரம், அங்கே கங்கைக்கு அப்பால் தமிழர்கள்…. இவ்வாறிருக்கையில் நான் எப்படி அம்மா கால்களையும் கைகளையும் நீட்டியவாறு உறங்குவது  ?… “ என்றிருக்கிறான்.
சிறு வயதில் தமிழர்களோடு பகைமை பாராட்டமாட்டேன் என உறுதி மொழி எடுக்க மறுத்த காமினியே, பின்னாளில் தமிழ் மன்னன் எல்லாளனைப் போரில் வென்று அநுராதபுர நகரைச் சிங்களர்களுக்கு உடமையாக்கினான் என்னும் தகவலைப் பதிவு செய்திருக்கிறது மகாவம்சம்.
அந்தக் காமினி அரசனை ஏற்றிப் போற்றும் மகாவம்சத்தைத் தமது “கீதை’யாக எண்ணும் சிங்களத் தலைமைகள்,  தாமும்,  மற்றொரு ‘துட்ட காமினி’யாக உருவாவதற்குக் கனவு கண்டார்கள். தங்கள் ‘கனவுகளை’ நனவாக்க அவர்களுக்குக் கிடைத்த சுலபமான வழி, தமிழர்களை எதிர்ப்பது என்றாயிற்று.  இந்த வரலாற்றுத் துவேஷமே இன்று ஈழத் தமிழர்களை; மகிந்த துவம்சம் செய்யும் அளவுக்குப் புரையோடிப் போயிருக்கிறது.
[குமுறல்கள் தொடரும்]

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை