வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Tuesday, January 17, 2012

[குட்டித் தீவில் குமுறல்கள் -பகுதி-04]சட்ட சபையில் சரிபாதி இழந்தோம்!

ஈழப் போராட்டம், அரசியல் தளத்திலிருந்து ஆயுதப் போராக உருவான  1980 களின் ஆரம்பத்தில்  மலேசியாவில் எனது அரசியல் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தேன் என முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்.

அப்போது அந் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் நண்பர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி…
” ஏன் சார் நீங்கள் இலங்கையில் சிங்களவர்களுடன் போரிட்டுக் கொள்கிறீர்கள்…? நாங்கள் இங்கு வாழ்வது போல் நீங்களும் அவர்களுடன் சேர்ந்து வாழலாம்
அல்லவா? நாங்கள் இங்கு என்ன மகிழச்சியாக இல்லையா.. ? மலேசியா-சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நாம் வந்து குடியேறியது போன்று இலங்கைக்கும் சென்றவர்கள் தாமே நாமும்… ..” என்பார்கள்.
ஓரளவு படித்த மக்களிடையேயும் இது போன்ற ‘ஈழ வரலாறு புரியாத’ ஓர் மயக்க நிலை இருப்பதை அப்போது கண்டிருக்கிறேன். இது போன்ற எண்ணம், இன்றும் – தமிழகம், மலேசியா இந் நாடுகளில் வாழும் சிலரிடம்- உள்ளது!
உண்மையில் இலங்கையில் வாழும் மலையகத் தமிழ்ச் சகோதரர்களைப் போன்று, ஆங்கிலேயர்களது ஆட்சியில் அவர்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒப்பந்தக் கூலிகளாய் அழைத்து வரப்பட்ட மக்களே இன்று இந் நாடுகளின் குடியுரிமை பெற்று, அந் நாட்டின் ’புத்திரர்கள்’ என்று சொல்லப்படும் மக்களுக்குரிய உரிமைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் இந் நாடுகளில் ஓர் குறிப்பிட்ட பிரதேசத்தில்  நிலையாகவும் செறிவாகவும் வாழும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. இவ்வாறிருந்தும், இந்த நாடுகள் ஆங்கில அரசிடமிருந்து சுதந்திரம் அடைந்த போது அங்கு வாழ்ந்து கொண்டிருந்த அனைவருமே அந் நாட்டின் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப் பட்டார்கள்.
இன்று அந் நாடுகளில் அரசின் உயர்ந்த பதவிகளிலும், அமைச்சுக்களிலும் இடம் பெற்றுச் சிறப்புடன் வாழும் தமிழர்கள் யாவரும், ஆங்கில அரசினால் அழைத்துவரப் பட்டவர்களின் வழித் தோன்றல்களே.
ஆனால், இலங்கையைப் பொறுத்த வரையில், அந் நாட்டின் வடக்கு-கிழக்குப் பகுதிகளைப் பல நூற்றாண்டுகளாய் தமது தாயகமாகக் கொண்டிருக்கும் தமிழர்கள் ஒரு புறமும், ஆங்கிலேயர்களால் அழைத்து வரப்பட்டு ‘மலையகப் பகுதிகளில்’ குடி அமர்த்தப்பட்ட தமிழர்கள் மறு புறமும் என இரு வேறுபட்ட அரசியல் வரலாற்றை உடைய மக்கள் அங்கு வாழ்கிறார்கள்.
ஈழத்தில் தமக்கென ஓர் அரசினைப் பெறப் போராடுபவர்கள் ஈழத்தின் பூர்வீகத் தமிழர்களே அன்றி, மலையக மக்கள் அல்ல.
இதில், வேடிக்கை யாதெனில், ஆங்கிலேய அரசினால் கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் யாவரும், அதன் பின்னர் அவர்கள் வாழ்ந்த நாடுகளின் குடிமக்களாக ஆக்கப்பட்டனர்
இலங்கையிலோ, அவ்வாறு வந்தவர்களில் பலர் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.
இதற்கெனச் சட்டங்களை இயற்றித் தமிழர்களை இலங்கையில் மிகச் சிறுபான்மை இனமாக மாற்றும் ‘சதியினை’ திட்டமிட்டுப் புரிந்தவர்கள் சிங்களத் தலைவர்களே!
மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டது போல், சுதந்திரத்தின் முன் அந் நாடுகளில் வாழ்ந்த அனைவருமே அந் நாட்டின் குடிமக்கள் என்னும் நிலை ஏற்படுத்தப் பட்டிருக்குமாயின், ‘பிரஜா உரிமைச் சட்டத்தினை’ எதிர்த்து இலங்கைத் தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்ததால் உருவான தமிழரசுக் கட்சியினைத் ‘தந்தை செல்வா’ தோற்றுவிப்பதற்கான காரணமும் ஏற்பட்டிருக்காது.
ஒருவகையில், இலங்கை அரசு அது சுதந்திரம் பெற்ற காலத்திலேயே மிகப் பெரும் மனித உரிமை மீறல்களைப் புரிந்திருக்கிறது எனலாம்! மூன்று தலைமுறைகளுக்கும் மேலாகத் தங்கள் தாயகம் என வாழ்ந்திருந்த –இலங்கைப் பொருளாதாரத்தின் முது கெலும்பாக வாழந்த- மிகப் பெரும் மக்கள் சமூகத்தினை, அவர்கள் ’தமிழர்கள்’ என்னும் ஒரே காரணத்துக்காக நாடற்றவர்களாக்கி விரட்டியவர்கள் சிங்கள அரசியல் வாதிகள் தாம்.
மக்கள் எண்ணிக்கையை வைத்து அரசியல் நடாத்தும் ‘மக்களாட்சி’ முறையில், தமிழர்களைப் பலமிழக்கச் செய்யும் வகையில் திட்டங்களை வகுப்பதில், சிங்களத் தலைமைகள் நீண்ட காலமாகவே ஈடுபட்டு வந்திருக்கின்றன.அதன் ஆரம்பப் படியே ‘பிரஜா உரிமைச் சட்டம்’.
மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக மாற்றியதன் மூலம், தமிழர்களது அரசியல் பங்களிப்பினைக் கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்தது சிங்கள அரசு!
அந்நியர்களின் ஆதிக்கம்:-
மேற்குலக வியாபாரிகளான, போர்த்துக் கேயர்கள் இலங்கயை வந்தடைந்த 1505 ஆம் ஆண்டில், அங்கு வடக்கில் யாழ்ப்பாண அரசும்; மத்திய மலை நாட்டில் கண்டி ராஜ்யமும்; தென் மேற்குப் பகுதியில் கோட்டே [கோட்டை] ராசதானியும் இருந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது.
இவ்வாறு வந்த போர்த்துக் கேயர்கள் சுமார் 89 வருடங்கள் கழித்து கோட்டை ‘ராஜ்ஜியத்’தின் நிர்வாகத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அச் சமையத்தில் கண்டியும், யாழ்ப்பாணமும் தனி அரசுகளாகவே இருந்துவந்தன.
எனினும், அடுத்த 25 வருடகாலப் படையெடுப்புகளின் வழியாக, 1619ல் அவர்கள் யாழ்ப்பாண அரசினையும் தங்களது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தனர். கி.பி 1284 முதல்  சுமார் 335  வருடங்களாகத் தொடர்ந்து ஆட்சி செலுத்திய யாழ்ப்பாண அரசு தனது முடி உரிமையை இழந்தது அப்போதுதான்.
ஆனால், கண்டி அரசு அப்போதும் தனி அரசாகவே தொடர்ந்தது. போர்த்துக் கேயர்களது மிரட்டல்களைச் சமாளிப்பதற்காக, அன்று அவர்களுக்குச் சவாலாக விளங்கிய ஒல்லாந்தர்களை (டச்சுக்காரர்கள்) கண்டி அரசன் நாடினான்.
ஒருங்கிணைந்த கிழக்கிந்தியக் குழுமம்[United East-India Company] என்னும் பெயரில் அன்றைய கண்டி அரசனின் ஆதரவுடன் மலைப் பிரதேசங்களில் தங்களை வலுவாக்கிக் கொண்ட டச்சுக்கள், 1638 ல் கோட்டைப் பகுதியிலும் காலூன்றினர்.
வழக்கமாக, அரசுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் யாவும்; அவர்களது ஆட்சியின் கீழுள்ள மக்களது நலன்களை விடவும், சம்பந்தப் பட்ட அரசுகளது ஆளுமையை வலுப்படுத்தவும், வர்த்தக நலன்களைப் பேணவுமே உதவுகின்றன. இது அன்று முதல் இன்றுவரை தொடரும் ‘மாறா விதி’ எனலாம்!
ஒல்லாந்தர்களுக்கும் அன்றைய கண்டிய அரசர்களுக்கும் இடையே உருவான ஒப்பந்தங்கள் அனைத்தும் மேற்குறிப்பிட்ட ‘ஆளும் தரப்பினர்’களது நலன்களையே குறியாகக் கொண்டிருந்ததில் வியப்பேதும் இல்லை.
இவ்வாறு அடுத்த 157 வருடங்களாகத் தொடர்ந்த கண்டி-ஒல்லாந்த அரசுகளுக்கிடையிலான உறவில் 1795 ஆம் ஆண்டளவில் விரிசல்கள் தோன்றின.
இதனால் ஒல்லாந்தர்களுக்குப் போட்டியாக விளங்கிய பிரித்தானிய கிழக்கிந்தியக் குழுமத்துடன் அன்றைய கண்டி மன்னன் செய்து கொண்ட ஒப்பந்தம் 1796ல் கோட்டை அரசின் நிர்வாகம் பிரித்தானியர்கள் வசம் சிக்க வழிகோலிற்று.
அதன் பின்னர், 1815 மார்ச் 02 ஆம் நாள் கண்டி அரசும் ஆங்கிலேயர் வசமாகியது.
1833 முதல் இலங்கை முழுவதும் ஓர் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
ஆங்கில அரசினால் ஏற்படுத்தப் பட்ட சட்டப் பேரவையில் அதன் உறுப்பினர்கள் யாவரும் சமூகங்களின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டனர்.
தமிழர் ,இசுலாமியர்,பறங்கியர், மேலை நாட்டினர், கண்டிச் சிங்களர், கரையோரச் சிங்களர் என இச்சமூக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகளே 1931 வரையிலான ஆங்கிலேயர்களது ஆட்சி  நிர்வாகத்தில் இடம்பெற்றிருந்தனர்.
அதன் பின்னர் உருவான ‘டொனமூர் ஆணைக்குழு’  தமிழர்களைப் பொறுத்த மட்டில் மிகப் பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது!
எனினும், சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரை மக்கள் தொகை மற்றும் அவர்களது பிரதேசத்தின் பரப்பளவு இவற்றின் அடிப்படையில் அமைந்திருந்தது தமிழர்களுக்கு ஓரளவு சாதகமாக அமைந்தது.
இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன் பிரித்தானிய அரசுடன் அது குறித்துப் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துச் சென்றவை அன்றைய பிரதிநிதிகள் சபையின் அமைச்சர் குழுக்களே ஆகும்.
அன்று அவர்களால் ஆங்கிலேய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த உத்தேச அரசியல் அமைப்புத் திருத்தத்தில்…………..முழு இலங்கையிலும் தேர்வு செய்யப்படும், 95 பிரதிநிதிகளில்….
சிங்களர்- 58 ; இலங்கைத் தமிழர்- 15; இந்தியத் தமிழர்-14; இசுலாமியர்-08  என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக் கொண்டு இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்படவேண்டும் என்பதே சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரையாக இருந்தது.
என்றாலும், இதன் அடிப்படையில் அமைந்த –சோல்பரி அரசியல் அமைப்பின் கீழ் நடைபெற்ற 1947 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர்களது பிரதேசமான வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இருந்து 12 பேரும்; மலையக மக்களைப் பிரதிநிதித்துவம் செய்து 08 உறுப்பினர்களும் மட்டுமே தெரிவாகி இருந்தார்கள்!
அதுதான் போகட்டும், சுதந்திர இலங்கையின் முதலாவது தேர்தல் என்னும் பெருமை(?)யினைப் பெற்ற 1952 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இருந்து மட்டுமே தமிழர்கள் அரச பேரவைக்குத் தெரிவானார்கள். மலையகத்தில் தெரிவான அனைவருமே சிங்களர்களாகவே இருந்தனர். ஆம்,மலையகத் தமிழர்களது வாக்குரிமைகளைப் பறித்த ‘சுதந்திரச் சிங்கள’ அரசு தமிழர்களது பிரதிநிதித்துவத்தையும் சேர்த்தே பறித்தெடுத்துக் கொண்டது.
சுதந்திர(?) இலங்கையின் தமிழர்கள் மீது விழுந்த முதல் அடி இந்தப் பிரதி நிதித்துவ அடியே ஆகும்.
அதனைத் தொடர்ந்தது……… பிரதேசப் பறிப்பு……
[குமுறல்கள் தொடரும்…]

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை