வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Saturday, January 28, 2012

எனது பயணமும்.பாகம்-05

17.05.2009. பொழுது புலர்ந்தபோது பிரமிப்பாக இருந்தது! இறுதி நாட்களும் 
 


அதுவரை பொறுமையாக இருந்த படையினன் கதிரையில் அமர்ந்தான். அந்தப் படையினன் உண்மையிலேயே
என்ன கேட்கப்போகிறான் என்று தெரியாத தயக்கம் என்னை ஆட்டிப்படைத்ததைவிட தரையில் இருந்து இன்னமும் தவித்துக்கொண்டு கிடக்கும் பையனின் பரிதாபக்கோலம்தான் மனதை துன்புறுத்தியது.
‘தங்கச்சி பேர் சொல்லுங்க’ என்று கேள்விகளை கேட்கத் தொடங்கினான். எனினும் அவனது பார்வை அடிக்கடி அந்த பையனில் நிலைத்தது. அந்த படையினனுக்கு இரக்கம் இருந்தாலும் அவனால் தனித்து எந்த முடிவையும் எடுக்கமுடியாது.
அந்தப் பையனின்மீது பாதிக்கண்ணும் எழுத்தின்மீது மீதிக்கண்ணுமாக பதிவைத் தொடர்ந்தான். எலும்பும் தோலுமாக படையினனின் அருகில்கிடந்த பையன் இன்னமும் அந்தரப்பட்டுக்கொண்டிருந்தான். அன்மை நாட்களில்தான் காயமடைந்திருப்பான் போலும்.
குருதியிழப்பே அவனை அவ்வளவு சோர்வடையச் செய்திருக்கிறது. அவனுக்கு அதிகமாய் வியர்த்துக்கொட்டிது. அவன் கண்களை மூடிவிடுவானோ என்ற அச்சம் எனக்கு எழுந்ததை போலவே அந்த படையினனுக்கும் எழுந்திருக்கலாம். ஒருவாறு நானும் பெயர், முகவரி அடங்கிய பதிவை கொடுத்துவிட்டு அவ்விடத்தைவிட்டு விலகினேன்.
சந்தியாவும் கங்காவும் பதிந்துவிட்டுவர நேரம் இரவு பத்து மணியை தாண்டிவிட்டது. மூவருமாகச்சென்று கூட்டத்திடையே ஒரு இடைவெளியை தேடிப்பிடித்து அமர்ந்துகொண்டோம். என்ன செய்வதென்று புரியவில்லை.
பசியோ தாகமோ களைப்போ எதுவுமே தெரியவுமில்லை. ஆனால் எல்லாம் இருந்தனதான். என் சுடிதாரின் தோள்துண்டை விரித்து மூவரும் நிலத்தில் சரிந்தோம். வானம் இருளாகவே இருந்தது.
கண்ணுக்கெட்டிய தூரம்வரை மின்குழிகள் எரிந்துகொண்டிருந்தன. இருந்திருந்துவிட்டு வட்டுவாகல் தாண்டிய பகுதியில் வெடிச்சத்தங்கள் கேட்டுக்கொண்டுதான் இருந்தன. எனக்கு தலைவலித்தது. மூளை களைத்துப்போனதால் ஏற்பட்ட வலி. கண்களை மூடிக்கொண்டு அமைதியாக கிடக்கத்தான் முயன்றேன். ஆனால் முடியவில்லை.

அந்த இரவு மிகவும் கொடியதாய் இருந்தது. இப்போதைக்கு விடியமாட்டேன் என்றது. நித்திரையுமில்லாத விழிப்புமில்லாத அரைமயக்க நிலையில் கிடந்த என் கால்கள் வலித்தன. நாரி அறுந்துவிடுமளவுக்கு உளைந்தது.
ஒழுங்கான உணவில்லாத காரணமாய் ஏற்பட்ட சத்துக்குறைபாடுதான் காரணம் என்பதை அறிவேன். ஏனெனில் குருதிச்சோகையால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவள்தான் நான் என்பது எனக்குத் தெரியும். சற்றே திரும்பக்கூட இடமற்று நெருக்கிக்கொண்டு கிடந்த என் உடலால் வேதனையை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
உடல் வேதனையைவிட மனவேதனை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. தூங்க இயலாமல் கண்களில் வழிந்த துயரத்தை துடைத்தபடியே அந்த நீண்டதான இரவை கழித்தேன்.
லட்சக்கணக்கான மக்களிடையே கிடந்தபோதும் யாருமே இல்லாத உணர்வு என்னை வாட்டியது. அது பெற்றோரையோ உறவுகளையோ நினைத்தபோது ஏற்பட்ட உணர்வல்ல. சரிவர இன்னதுதான் காரணம் என்று குறித்துச் சொல்லமுடியாத ஒரு மாபெரும் வெறுமை என்னை விழுங்கிவிட்டதைப்போல உணர்ந்தேன்.
அந்த வெறுமைதான் காலம் முழுதும் இனி என்னை ஆக்கிரமிக்கப்போவதாய் பயங்காட்டியது.
17.05.2009. பொழுது புலர்ந்தபோது பிரமிப்பாக இருந்தது. இலட்சக்கணக்கான மக்கள் வெட்டைவெளி முழுவதையும் நிறைத்துக்கிடந்தார்கள்.
அழுக்கு ஆடைகளோடும் குழப்பமான உணர்வுகளோடும் நின்ற அவர்களில் எவரும் எவருடனும் எதுவும் பேசிப்பகிரவில்லை. ஆளாளுக்கு தண்ணீர் தேடியும் உணவு தேடியும் அலைந்தார்கள்.
உடலால் இயங்கக்கூடிய மனிதர்கள் ஆயிரக்கணக்கானோரிடையே அடிபிடிப்பட்டு அவற்றை கொண்டுவந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் உணவுப் பொதிகளுடனோ தண்ணீர் போத்தில்களுடனோ போவதையும் வருவதையும் காணமுடிந்தது. சிலர் தம் உடைகளையும் நனைத்துக்கொண்டு சென்றார்கள்.

ஒரு போத்தில் தண்ணிக்காககூட இரத்தம் சிந்தவேண்டி இருக்கு’ என்றபடி எங்களை கடந்து சென்றவரை அவதாணித்தேன். அவரது கெண்டைக்காலில் இருந்து குருதி வழிந்துகொண்டிருந்தது. கொஞ்சத் தண்ணீருக்கு தொகையானவர்கள் போட்டி போடுவதால் ஏற்படும் தகராறுகளை போக்க படையினர் வரிசையில் நிற்கச் சொன்னார்களாம்.
வரிசையில் நி;ன்றால் கிடைக்காதென்று அதை குழப்பிக்கொண்டு நின்ற அனைவருக்கும் மட்டையடி விழுந்ததாம். இப்படியான கதைகளை கேள்விப்படவே தண்ணீர் வேண்டாம் என்றுவிட்டது என் உள்ளுணர்வு.
இடிபட்டுப்போய் ஒரு குவளை தண்ணீரைகூட என்னால் எடுத்துவர முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அடடா பதியும் இடத்தில் தந்த போத்திலையாவது கொண்டு வந்திருக்கலாமே என்று கவலையாக இருந்தது.
இவ்வளவு தொகையானதாக மக்கள் வருவார்கள் என்று படையினருக்கு தெரியாதாம். இலட்சக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் இருந்ததுபற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லையாம்.
அதனால்தான் ஒழுங்குபடுத்தப்பட்ட உணவும் தண்ணீரும் போதாமல் போய்விட்டதாம். சில ஆயிரம்பேர்தான் வருவார்கள் என்று அரசாங்கம் தமக்குச் சொன்னதாக படையினர் சொல்கின்றார்களாம் என்று மக்கள் கதைத்துக்கொண்டார்கள்.

யானைப்பசிக்கு சோளப்பொரி கிடைத்ததைப்போல சில ஆயிரம்பேருக்கு உணவு கிடைத்தது. பல்லாயிரம்பேர் பட்டினியோடு கிடந்து அழுந்தினார்கள்.
பரந்த புல்வெளியை பகுதி பகுதியாக முட்கம்பிகள் பிரித்திருந்தன. முட்கம்பியின் வெளிப்பகுதி எங்கும் படையினர் காவல் செய்தபடி நின்றார்கள். அவர்கள் எல்லோரும் என்னவெல்லாம் நினைத்துக்கொண்டிருப்பார்கள் என்பதை புரிய முடியவில்லை. ஏனெனில் அவர்களது முகங்களில் எந்தவிதமான உணர்வுகளுமே இருக்கவுமில்லை.
‘அக்கா எங்களால் அடிபிடிப்பட்டு சாப்பாடு தண்ணியெல்லாம் எடுக்க முடியாதக்கா. அதோட ஆளாலுக்கு வந்து எழுப்பி கூட்டிக்கொண்டும் போறாங்கள். ஆமி வந்து வா எண்டு கூப்பிட்டால் வரமாட்டன் எண்டு என்னெண்டு சொல்ல முடியும். நாங்க தாமதிக்கிற ஒவ்வொரு நிமிசமும் பிரச்சினைதான். இண்டைக்கே உள்ள போவமா?’ என்றாள் சந்தியா.
அவள் சொல்வதும் சரிதான். மூவரும் சென்று உள்ளே செல்பவர்களது வரிசையில் நின்றோம். வரிசையோ ஆமையைவிட குறைந்த வேகத்தில் நகர்ந்தது. பல நேரங்களில் நகரவேயில்லை. அதிகாலை ஐந்துமணிக்கே வரிசையில் இடம்பிடித்துவிட்ட நாங்கள் பகல் பத்துமணிக்கு பிறகுதான் உள்நுழையும் வாயிலருகே வரமுடிந்தது.
ஆனால் அவ்விடத்தில் மூச்செடுக்கவே திண்டாடவேண்டி இருந்தது. குய்யோ முறையோ என்ற சத்தமும் கூக்குரலும் நெருக்கித்தள்ளலுமாக ஒரே களேபரம். சனங்களோடு முண்டியடித்துக்கொண்டு மணிக்கணக்காக நின்றும் அந்த நுழைவாயிலின் கம்பிகளை எட்டிக்கூட தொடமுடியவில்லை.
குழந்தைகளை தூக்கிக்கொண்டும் சிறுவர்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டும் நிற்கும் பெற்றவர்கள் படும்பாட்டை பார்க்க பரிதாபமாக இருந்தது.
மக்கள் அவ்வளவு நெருக்குவார பட்டுக்கொண்டு நிற்கையில் நானும் முண்டியடித்துக்கொண்டு நிற்பது ஈனத்தனமாகவே பட்டது. அப்படி நிற்பதை மிகுந்த அவமானமாக உணர்ந்தேன். என்னை நானே வெறுத்தேன்.
எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கத்துணிந்தவளாய் அத்தனைகாலம் உறுதியுடன் நின்றேனோ அந்த உறுதியெல்லாம் தொலைந்தவளாய் தவிக்கும் சனங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லக்கூட தகுதியற்றவளாய் நிற்பது கொடுமையானதாய் இருந்தது.
‘சந்தியா எனக்கு அந்தரமாக்கிடக்கு சந்தியா. சனம் போகட்டும் நாங்க ஆறுதலா போவம்’ என்றேன் அவளின் காதருகே.
‘எனக்கும் ஒரு மாதிரித்தானக்கா இருக்கு. சனங்கள் என்ன நினைக்குதுகளோ எண்டு குற்ற உணர்வாகத்தான் இருக்கு’ என்றாள் அவளும்.
‘சரி. பின்னுக்குப்போவம்’ என்று நான் திரும்ப முயன்றேன். என்னால் உடலைக்கூட திருப்ப முடியவில்லை. நிற்கும் இடத்திலிருந்து காலை தூக்கினால் தூக்கியபடியே நிற்க வேண்டியதுதான். மீண்டும் இடம்பிடித்து ஊன்ற அரைமணிநேரம் தேவைப்படும் என்பதை இவ்விடத்தில் நின்ற எவராலும் மறுக்கமுடியாது. அத்தனைபேரும் அரைக்காலில்தான் நின்று தடுமாறினார்கள்.
சனங்களில் முட்டுப்பட்ட என் கைகள் எரிந்தன. அவ்வளவு உடல் வெம்மை. என்னால் ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியவில்லை. ஒவ்வொரு தடவை காலை நகர்த்தவும் நீண்டநேரம் முயற்சிக்கவேண்டி இருந்தது. சன வெக்கையால் அவிந்துகொண்டிருந்தேன்.
மற்றவர்கள் விடுகின்ற மூச்சு என்னில் சுட்டது. ஓவ்வொருவரின் உடலும் அனலெனச்சுட்டது. மற்றவர்கள் என்னில் முட்டும்போது என்னால் கட்டுப்படுத்த முடியாதளவு ஆற்றாமையும் சினமும் வந்தது. அப்படித்தான் மற்றவர்களுக்கும் இருக்கும் என்பதை உணர்ந்துகொண்டு இயலுமானளவு பொறுமை காத்தேன்.

சுமார் ஒரு மணிநேரம் முயன்று ஒவ்வொரு பாதமாய் எடுத்துவைத்து மக்கள் ஐதான பகுதிக்கு வந்தேன். ஓரிரு குடும்பங்களாய் அங்கொன்றும் இங்கொன்றுமாக குந்திக்கொண்டிருந்தவர்களில் எனக்குத் தெரிந்தவர்கள் இருந்தார்களா இல்லையா என்று தெரியவில்லை. ஏனெனில் கொஞ்சம் நிதானமற்ற நிலையை உணர்ந்தேன். விழமுன் நிலத்தில் அமர்ந்துகொண்டேன்.
அப்படியே எனது பையின்மீது சரிந்து மேற்துணியால் மூடிக்கொண்டு அமைதியாக கிடக்க முயன்றேன். சற்றுநெரத்தில் ஓரளவு நிதானத்தை பெறமுடிந்தது.
நான் எப்போதுமே அப்படித்தான். வலியை உணர்ந்து அதை தாங்கிக்கொள்வேன். அங்கம் முழுவதும் ஆயிரம் காயங்களை சுமந்துகிடந்த காலங்களிலும் குளறி அழுதவளில்லை.
வலியை மூளையால் கிரகித்து அதை உள்வாங்கி அநுபவித்துத்தானே தாங்கிக்கொண்டேன். இப்போது அதே பழைய காயங்களை வெய்யில் கடுமையாய் வறுத்தெடுத்தது. சற்றுநேரத்தின்பின் எழுந்து அமர்ந்துகொண்டேன். ஆனால் கண்களில் காட்சிகள் எதுவும் தெளிவாய் தெரியவில்லை.
‘என்னக்கா தனிய குந்திக்கொண்டு இருக்கிறிங்க?’ என்று பழக்கப்பட்ட குரலொன்று மெதுவாய் கேட்டது.
தொடரும்…………….

  நன்றி ஈழம்5 இணையம்


 உறவுகளே இந்த  பக்கத்தை உங்கள் நண்பர்கள் உறவுகளிடம் கொண்டு சென்று சேருங்கள் (SHARE   ) பகிருங்கள் என்னும் பகுதியை சொடுக்கி நண்பர்கள் அனைவரிடமும் கொண்டு செல்லுங்கள் 
 
  இதற்க்கு முந்தைய தொடர் 

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை